புதுடெல்லி: ‘புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்து செல்வதற்கான பேருந்துகளை இயக்குவதற்கு அனுமதி தாருங்கள்,’ என உத்தரப்பிரதேச அரசை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வீடியோ பதிவு மூலமாக மீண்டும் வலியுறுத்தி உள்ளார். . காங்கிரஸ் கட்சியின் சமூக வலைளத்தில் பிரியங்கா காந்தி நேற்று வெளியிட்டு இருந்த புதியங வீடியோ பதிவில், உத்தரப்பிரதேச அரசுக்கு மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:இது அரசியல் செய்வதற்கான தருணமல்ல. ஆனால், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவுவதற்கான நேரமாகும்.
உத்தரப் பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளுக்கு அனுமதி கொடுத்து தொழிலாளர்களை ஏற்றி செல்வதற்காக பயன்படுத்திக் கொள்ளுங்கள். கடந்த 24 மணி நேரமாக பேருந்துகள் எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் விரும்பினால் உங்களின் பேனர்களையும், போஸ்டர்களையும் அதில் ஒட்டிக்கொள்ளுங்கள். ஆனால், பேருந்துகளை இயக்க அனுமதி தாருங்கள். இவ்வாறு பிரியங்கா கூறியுள்ளார். இதனிடையே, பேருந்துகளுக்கு அனுமதி அளிக்க வலியுறுத்தி ஆக்ராவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய்குமார் லாலு உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
பட்டினி, பீதியால் 383 பேர் பலி
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஊரடங்கு என்பது நல்ல விஷயம். ஆனால், இதை அமல்படுத்தும் முன் எந்த திட்டமிடுதலையும் மத்திய அரசு செய்யவில்லை. அதனால், ஊரடங்கில் இருந்து மீள வழி தெரியாமல் தவிக்கிறது. கடந்த 3ம் தேதி நிலவரப்படி இந்தியாவில் வேைலயில்லா திண்டாட்டத்தின் அளவு 27.1 சதவீதமாக இருப்பதாக பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. இது அமெரிக்காவை விட 4 மடங்கு அதிகம். மே 10ம் தேதி வரையிலான ஊரடங்கு காலத்தில், பட்டினி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 383 பேர் இறந்துள்ளனர். பட்னியால் 58 இறந்துள்ளனர். தொற்று பயத்தில் 91 பேர் தற்கொலை செய்துள்ளனர். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 89 பேர் சொந்த ஊர் செல்லும் வழியில் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர்,’’ என்றார்.