மதுரை: கொரோனா தொற்று பரவலால் சிறைக்கைதிகளுக்கு பரோல் வழங்குவது சாத்தியமில்லை என அரசு தரப்பில் ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை, திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த தங்கராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழக சிறைகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இதனால் சிறைகளில் நெரிசல் உள்ளது. தற்போதைய நெருக்கடி நேரத்தில் கொரோனா தொற்று பரவினால் சிறைகளில் உயிரிழப்பு அதிகளவில் ஏற்படும். எனவே, சிறு சிறு வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பரோல் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் சேதுராமன் ஆஜராகி, ‘‘சிறைக்கைதிகளுக்கு நீண்டகால பரோல் வழங்குவது சாத்தியமில்லை. வெளியில் சென்று வருவதால் தொற்று பரவ வாய்ப்புள்ளது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.