×

சேலம் அருகே பயங்கரம்: அதிமுக பெண் பிரமுகர் நடுரோட்டில் குத்திக்கொலை

சேலம்: சேலம் அடுத்த பனமரத்துப்பட்டியில் அதிமுக பெண் பிரமுகர், நடுரோட்டில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். சேலம் மாவட்டம், மல்லூர் அடுத்த சந்தியூர் ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி சாந்தா(50). மரவள்ளிக்கிழங்கு மாவு விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். மேலும், பனமரத்துப்பட்டி ஒன்றிய அதிமுக மகளிரணி நிர்வாகியாகவும் இருந்து வந்தார். சாந்தாவின் மருமகள், பனமரத்துப்பட்டியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வருகிறார். தற்போது ஊரடங்கு காலம் என்பதால், தினமும் சாந்தா டூவீலரில் சென்று, அவரை அழைத்து வருவார். அதன்படி நேற்று மாலை 6 மணிக்கு, டூவீலரில் பனமரத்துப்பட்டி நோக்கி சென்றார். வீட்டிலிருந்து கிளம்பி வெகுநேரமாகியும், சாந்தா பெட்ரோல் பங்கிற்கு வராததால், அவரது மருமகள் வீட்டில் உள்ளவர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

 இதனிடையே, பனமரத்துப்பட்டி செல்லும் வழியில், வயிறு, மார்பு மற்றும் தலை ஆகிய பகுதிகளில் ரத்த காயங்களுடன் சாந்தா சடலமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்றவர்கள், இதுகுறித்து மல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், இன்ஸ்பெக்டர் அமுதவள்ளி மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில், பனமரத்துப்பட்டி நோக்கி சென்ற சாந்தாவை வழிமறித்த மர்ம நபர்கள், அவரை கத்தியால் குத்தியும், கல்லால் தாக்கியும் கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, மாவட்ட எஸ்பி தீபா கனிகர் மற்றும் ரூரல் டிஎஸ்பி உமாசங்கர் ஆகியோர், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, சாந்தாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Tags : Salem ,death ,AIADMK , Salem, prime minister woman, stabbed
× RELATED நீலகிரி அதிமுக வேட்பாளர் சேலத்தில் வாக்களித்தார்