×

மகன் கீழே விழுந்ததுகூட தெரியாமல் போதையில் பைக்கில் சென்ற தந்தை: சிறுவனை மீட்ட இளைஞர்கள்

ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தேவாமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு அன்புஅமுதன்(4), அகிலேஸ்வரன் (1) என இரண்டு மகன்கள் உள்ளனர்.  திருப்பூரில் வேலை பார்த்து வந்த செல்வம், கொரோனா ஊரடங்கால் அங்கிருந்து வந்து மாமியார் வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். நேற்றுமுன்தினம் மாலை பைக்கில் மகன் அன்புஅமுதனுடன் கடாரங்கொண்டான் கிராமத்தை சேர்ந்த உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றார். அங்கு அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு பைக்கின் முன்பகுதியில் அன்புஅமுதனை உட்கார வைத்துக்கொண்டு இரவு 10 மணியளவில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

புதுச்சாவடி அருகே செல்வத்திற்கு போதை அதிகமாகி சுய நினைவிழந்தபடி பைக்கை ஓட்டி சென்றதில் முன்னால் உட்கார்ந்திருந்த அன்பு அமுதன் வழுக்கி கீழே விழுந்தான். இதில் அவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கிய நிலையில் கிடந்தான். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இரவு டிபன் வாங்குவதற்காக சின்னவளையம் கிராமத்தை சேர்ந்த ராஜா நண்பர்களுடன் வந்த போது சிறுவன் அழும் குரல் கேட்டுள்ளது. அவனை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

தகவலறிந்து வந்த இன்ஸ்பெக்டர் தமிழரசி, சிறுவனின் போட்டோவை வாட்ஸ்அப்பில் வெளியிட்டதை அடுத்து உறவினர் மற்றும் அவரது தாய்  வந்து சிறுவனை மேல்சிகிச்சைக்காக கும்பகோணம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் செல்வத்தை உறவினர்கள் தேடிய போது சிறுவன் விழுந்த இடத்தில் இருந்து அரை கி.மீட்டருக்கு அருகில் முட்புதரில் நினைவிழந்து கிடந்துள்ளார். அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த சின்னவளையம் கிராம இளைஞர்கள் ராஜா, ராஜலிங்கம், நல்லசிவம், தினேஷ் ஆகியோரை இன்ஸ்பெக்டர் தமிழரசி மற்றும் உறவினர்கள் பாராட்டினர்.



Tags : Son, addict, father, boy, youth
× RELATED மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில்...