×

ரயில் போக்குவரத்து ஜூன் 1ம் தேதி துவங்கும் நிலையில் மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் முக்கிய நகரங்களுக்கு வரும் 25ம் தேதி முதல் விமான சேவை படிப்படியாக துவங்கும் என, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். ரயில் போக்குவரத்து ஜூன் 1 ம் ேததி துவங்குவதாக அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, விமான போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளளது. கொரோனா ஊரடங்கால் முதலில் பாதிக்கப்பட்டது விமான நிறுவனங்கள்தான். சீனாவில் கொரோனா பரவல் தீவிரம் ஆனதுமே, பிற நாடுகளுடனான விமான சேவை நிறுத்தப்பட்டது. மேலும், இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 25ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் உள்ளது.

சில தளர்வுகளுடன், 4ம் முறையாக வரும் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, விமான நிறுவனங்களின் நிலைமை மேலும் மோசமானது.விமானங்கள் இயக்கப்படாததால் இந்திய விமான போக்குவரத்து துறைக்கு நடப்பு நிதியாண்டில் 360 கோடி டாலர் (₹27,360 கோடி) இழப்பு ஏற்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.  இதற்கிடையே, பெரும்பாலான விமான நிறுவனங்கள் வரும் 1ம் தேதி முதல் முன்பதிவு நடைபெறும் என அறிவித்தன. இந்த சூழ்நிலையில்தான், விமான சேவை தொடர்பாக மத்திய அரசின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 இதுகுறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், ‘‘நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவை மே 25ம் தேதி முதல் துவங்க உள்ளது. படிப்படியாகத்தான் இந்த சேவை துவங்கும். பயணிகளுக்கான நெறிமுறைகள், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தால் தனியாக வெளியிடப்படும்’’ என்றார்,
சிவப்பு மண்டலங்கள்: கொரோனா ஊரடங்கில் அடுத்தடுத்த கட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், சிவப்பு மண்டல்களில் கடும் கட்டுப்பாடுகள் நீடித்து வருகிறது. படிப்படியாக மட்டுமே விமான சேவை அமலுக்கு வரும் என அமைச்சர் அறிவித்துள்ளதால், சிவப்பு மண்டலமாக உள்ள நகரங்களுக்கு விமான சேவை உடனடியாக துவங்கும் என  எதிர்பார்க்க முடியாது என விமான நிறுவனங்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

டெல்லி, மும்பை விமான நிலையங்கள் கூட சிவப்பு மண்டலத்தில்தான் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் சுமார் 650 விமானங்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது நிறுவனங்கள் தங்களிடம் உள்ள விமானங்களில் சுமார் 30 சதவீதம்  இயக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. பின்னர் அனுமதி, தேவைக்கேற்ப சேவை விரிவுபடுத்தப்படும் என விமான நிறுவனங்கள் தரப்பில் தெரிவித்தன.

இனி பயணம் எப்படி?
பயணிகளுக்கான வழக்கமான நடைமுறையில் பாதுகாப்பு கருதி கீழ்க்காணும் மாற்றங்கள் செய்யப்படலாம்.
* பயணி உள்ளே நுழைந்ததும், அவரது லக்கேஜ்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்படும்.
* சானிடைசரால் கையை சுத்தம் செய்ய வேண்டும்.
* வெப்பமானி மூலம் பயணிகள் சோதனை செய்யப்படுவார்கள்.
* ஐடி கார்டு, டிக்கெட்களை கையில் வாங்காமல் மிஷின் மூலம் ஸ்கேன் செய்யப்படும்.
* அடையாள அட்டையுடன் ஒப்பிட்டு பார்க்க, பயணிகள் முக கவசத்தை கழற்றி காண்பித்து விட்டு, மீண்டும் அணிய வேண்டும்.
* உறுதி செய்ததும், பாதுகாப்பு படைவீரர் அனுமதிப்பார்.
* மொபைல் போனில் டிக்கெட்டை காட்டியதும், இயந்திரம் மூலம் போர்டிங் பாஸ்  வழங்கப்படும்.
* பின்னர் டிரேயில் கையை கழுவ வேண்டும்.
* கவச உடை அணிந்த பாதுகாப்பு படை வீரர், பயணிகளை தொடாமல் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதிப்பார்.
* பேக்கேஜ் டேக் பெற்று, பயணியே தனது லக்கேஜில் ஒட்டி கன்வேயர் பெல்டில் வைக்க வேண்டும்.
* விமானத்துக்கு காத்திருக்கும்போதும் சமூக இடைவெளியுடன் அமர வேண்டும்.
* மிக மிக முக்கியம்... இவ்வளவு நடைமுறை இருப்பதால் 4 மணி நேரம் முன்பே விமான நிலையத்துக்கு செல்ல வேண்டி வரும்.
* சிறிய சானிடைசர் பாட்டில் எடுத்துச்செல்லலாம். ஆரோக்கிய சேது ஆப்சை மொபைலில் நிறுவியிருக்க வேண்டும்.

Tags : Announcement ,Government , In rail transport, domestic air service, the Federal Government
× RELATED பிளாக்பஸ்டர் பார்டர்-கவாஸ்கர் டிராபி:...