கொரோனா நிலவரத்தை கருத்தில் கொண்டு, 2021ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விழா ஒத்தி வைக்கப்பட வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்
உலகெங்கிலும் உள்ள திரைப்பட துறையினரால் மிகவும் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது அளிக்கும் விழா, 2021ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இந்தாண்டு டிசம்பர் 31ம் தேதி வரை வெளியாகும் திரைப்படங்களை பரீசிலித்து அதனடிப்படையில் விருது அளிக்கப்பட வேண்டும் என்பது விதியாகும். கொரோனா நிலவரத்தால் உலகம் முழுவதும் படங்கள் ரீலிஸ் ஆகாமல் இருப்பதால், சிறந்த படங்களையும், சிறந்த திரைப்பட கலைஞர்களையும் தேர்வு செய்வது பாதிக்கப்படும் நிலை நேரிட்டுள்ளது. ஆதலால் ஆஸ்கர் விழா ஒத்தி வைக்கப்பட வாய்ப்பிருப்பதாக வர்த்தக பத்திரிகையான வேரைட்டியில் (trade publication Variety) வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளது.