டெல்லி: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸை மொத்தமாகப் புவியிலிருந்து விரட்டியடிப்பதற்கு மருந்து அல்லது தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என அறிவியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருடத்தில்தான் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அனைத்து நாடுகளும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. சில நாடுகள் விலங்குகளிடம் சோதனை செய்யப்பட்டு வெற்றிப் பெற்றதாகவும், மனிதர்களுக்கு சோதனையிட இருப்பதாகவும் கூறி வருகின்றன.
இருந்தாலும், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புயல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியுள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 லட்சத்து 599 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் இதுவரை 3 லட்சத்து 25 ஆயிரத்து 156 பேர் உயிரிழந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 19 லட்சத்து 70 ஆயிரத்த 918 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,06,750 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 5611 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 140 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 3303 பேர் உயிரிழந்த நிலையில், 42,298 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.