×

தர்மபுரி மண்டலத்தில் பொது போக்குவரத்துக்கு தயார் நிலையில் பஸ்கள்

தர்மபுரி:  கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு தழுவிய அளவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தற்போது வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பஸ்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஊரடங்கு தொடர்பான கட்டுப்பாடுகளில் பல்வேறு துறைகளுக்கு தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளன. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய, தர்மபுரி மண்டலத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் 14 பணிமனைகள் உள்ளன. இந்த பணிமனைகள் மூலமாக, 347 டவுன் பஸ்கள் உள்பட மொத்தம் 853 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான பஸ்கள் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. இதற்காக தர்மபுரி மண்டலத்தில் அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

31ம் தேதி பிறகு அரசு உத்தரவு வழங்கிய பின்னர், அரசு பஸ்களை இயக்க தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. கிருமிநாசினி தெளித்து, பாதுகாப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் முதல் அரசு பஸ் ஓட்டுநர்கள், கண்டக்டர்கள் தினசரி பணிமனைக்கு வந்து கையெழுத்திட்டு செல்ல வேண்டு என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஓட்டுநர்கள், கண்டக்டர்கள் பணிமனையில் உள்ள அலுவலகங்களில் கையெழுத்திட்டு செல்கின்றனர். இதுகுறித்து தர்மபுரி மண்டல அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: கொரோனா ஊரடங்கில் செய்யப்பட்டுள்ள தளர்வுகளின் அடிப்படையில், விரைவில் அரசு பஸ்களின் போக்குவரத்து தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தர்மபுரி மண்டலத்தில் பொது போக்குவரத்தை தொடங்குவதற்கு, அரசு பஸ்கள் தயார் நிலையில் உள்ளன. அனைத்து பஸ்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன.

பஸ்களில் சுகாதார பராமரிப்பிற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் போக்குவரத்து கழக பணியாளர்கள் பயன்படுத்துவதற்காக கையுறைகள், முககவசங்கள், கிருமிநாசினிகள் சம்பந்தப்பட்ட பணிமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொது போக்குவரத்து தொடங்கப்பட்டால், அரசு விதிமுறைகளின்படி பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், கட்டாயம் முககவசம் அணியவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : transport ,zone ,Dharmapuri , Buses ready ,public transport , Dharmapuri zone
× RELATED டிப்போவில் ஓய்வெடுத்தவரிடம் செல்போன் திருடிய பஸ் டிரைவர்