டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. கொரோனா ஊரடங்கு தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டின் 4ம் கட்ட தேசிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவது மற்றவற்றில் இருந்து முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும். 4ம் கட்ட ஊரடங்கை நீட்டிப்பது பற்றி மாநில அரசுகளே முடிவெடுக்கலாம். மாநில அரசுகளின் பரிந்துரைப்படி 4ம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றார்.
மேலும், ‘ஊரடங்கால் சீர்குலைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க, ரூ.20 லட்சம் கோடிக்கான நிதிச் சலுகைகள் அறிவிக்கப்படும்,’ என்று தெரிவித்திருந்தார். அதன்படி, அதற்கு மறுநாள் புதன் கிழமையில் இருந்து தினமும் மாலை 4 மணிக்கு, இந்த பொருளாதார ஊக்குவிப்பு சலுகைகளை ‘தற்சார்பு இந்தியா திட்டம்’ என்ற பெயரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் படிப்படியாக அறிவித்தார். கடைசியாக, 5வது கட்டமாக கடந்த 17-ம் தேதி பிற்பகல் 11 மணிக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதற்கிடையே, இந்தியளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்தது. தொடர்ந்து தமிழக அரசும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்தது. மேலும், 25 மாவட்டங்களில் போக்குவரத்து சேவைக்கும் அனுமதி அளித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் அடுத்த 3 மாதங்களுக்கு 144 தடை உத்தரவை நீட்டித்து முதல்வர் பூபேஷ் பாகேல் உத்தரவிட்டுள்ளார். கர்நாடகா மாநிலத்தில் ஞாயிற்று கிழமை மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் மற்ற அனைத்து தொழில்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்புப் பணி குறித்தும், கட்டுப்பாடுகள் தளர்வுகள் குறித்தும் அமைச்சரவையில் விவாதிக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. மேலும், ரூ.20 லட்சம் கோடி பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்துவது பற்றியும், அம்பன் புயல் கரையை கடப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சரவையில் விவாதிக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி அமைதியாக சில திட்டத்தையும் மத்திய அரசு செய்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும், மத்திய அமைச்சரவை கூட்டம் முடிந்தப்பின் தான், அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தெரியவரும்.