×

மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம்: 3 குழந்தைகளை கொன்று கணவன் தற்கொலை

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே வடமங்கலம், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (37). இவரது மனைவி துளசி (33). இருவரும் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்தனர். இவர்களுக்கு ராஜேஸ்வரி (12), ஷாலினி (10) என்ற மகள்களும் சேதுராமன் (8) என்ற மகனும் இருந்தனர். இவர்கள் வடமங்கலம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் துளசி வேலைக்கு சென்றார். ஆறுமுகம் வீட்டில் இருந்தார். மாலையில் வேலை முடிந்து துளசி வீடு திரும்பினர். அப்போது, வீட்டில் உள்ள மின்விசிறியில் மகள் ராஜேஸ்வரி சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மற்ற குழந்தைகள் மற்றும் கணவனை தேடியபோது, வீட்டின் அருகில் உள்ள வயல்வெளியில் ஆறுமுகத்தின் பைக் அனாதையாக நின்றது.

அங்கு சென்று அவர்களை தேடியபோது, அங்குள்ள வயல்வெளி கிணற்றின் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு ஆறுமுகம் சடலமும், கிணற்றில்  ஷாலினி, சேதுராமன் ஆகிய சடலங்களும் கிடந்தன. தகவலறிந்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலங்களை கைப்பற்றி ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், துளசிியின் நடத்தையில் ஆறுமுகத்துக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர்களுக்குள் மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி, 3 குழந்தைகளை கொன்றுவிட்டு ஆறுமுகம் தற்கொலை செய்துள்ளார் என தெரியவந்ததாக போலீசார் கூறினர்.


Tags : suicide ,children , Wife, suspect, 3 children, murder, husband suicide
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை