திருவள்ளூர்: அக்னி வெயில் கடந்த 4ம் தேதி துவங்கியது. இது வரும் 28ம் தேதி வரை நீடிக்கும். ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் வீட்டில் இருக்க முடியாதவர்கள் மர நிழலில் தற்போது இளைப்பாற துவங்கிவிட்டனர்.இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 108 டிகிரி அளவுக்கு வெயில் சுட்டெரித்தது. சமூக இடைவெளிக்கு குடை பிடிக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில், பொதுமக்களும் தானாக குடைபிடித்து செல்ல ஆரம்பித்து விட்டனர். கொரோனா பயத்தால் வீட்டில் இருப்பவர்கள் தர்பூசணி, திராட்சை, முலாம்பழம் ஆகியவற்றை வாங்கி பழச்சாறு குடித்து வெப்பத்தை தணித்துக் கொள்கின்றனர்.
மேலும், இளநீர், நுங்கு மற்றும் கம்மங்கூழ், மோர் விற்கும் தள்ளுவண்டி வியாபாரிகளும் தங்களது வியாபாரத்தை துவக்கிவிட்டனர். மாவட்டத்தில், கடந்த 2 வருடங்களாக போதிய மழை இல்லாததால் பூமி வறண்டு காணப்படுவதாலும், பெரும்பாலான மரங்கள் பட்டுவிட்டதாலும் குளிர்ந்த காற்று வீசுவது குறைந்துள்ளது. மாறாக தற்போது அனல்காற்றுதான் அதிக அளவில் வீசி வருகிறது.