சென்னை: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக மின்வாரியத்தில் பொறியாளர், கணக்கீட்டாளர், அலுவலகப் பணியாளர்கள் என பல்வேறு பிரிவுகளின் கீழ் லட்சக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். பொதுமுடக்கத்தால் குறிப்பிட்ட சதவீத பணியாளர்களுடன் மின்வாரிய அலுவலகம் இயங்கி வருகிறது. இந்நிலையில் சென்னை, அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் பணிபுரியும், ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் தலைமையக கட்டடத்தில் 8வது மாடியில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனால் குறிப்பிட்ட வளாகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.