சென்னை: இந்தியாவிலேயே கொரோனா பரிசோதனை அதிகம் செய்யும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதன்மை வகிக்கிறது. ஆனாலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேற்று தலைமை செயலகத்தில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலை (ஐசிஎம்ஆர்) சார்ந்த சென்னை - தேசிய தொற்றுநோய் நிறுவனத்தின் இயக்குநர் மனோஷ் முரேக்கர் மற்றும் துணை இயக்குநர் பிரதீப் கவுர் சந்தித்து பேசினர்.
அப்போது கொரோனா பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சை தொடர்பாக தமிழ்நாடு அரசு எடுத்து வரும் பல்வேறு முன்னோடி நடவடிக்கைகளுக்காக பாராட்டு தெரிவித்தனர். மேலும், வரும் நாட்களில் ஊரடங்கை படிப்படியாக தளர்த்துவது குறித்தும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் உடனிருந்தனர்.