×

ஆம்பன் புயல் நாளை மாலை கரையை கடக்கிறது.. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

சென்னை: மேற்குவங்கம் - வங்கதேசம் இடையே நாளை மாலை ஆம்பன் புயல் கரையை கடக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த சனிக்கிழமை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. பின்னர் இது, சூப்பர் புயலாக உருவெடுத்து, வடக்கு நோக்கி நகர்ந்தபடி உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு வங்கம்- வங்கதேசம் இடையே, நாளை மாலை ஆம்பன் புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில், கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். அதேநேரம், சென்னையில், வானம் மேக மூட்டத்துடன் இருக்கும். கடல் சீற்றத்தோடு இருக்கும் என்பதால், மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

மேற்கு வங்க கடற்கரையிலிருந்து 650 கி.மீ தொலைவில் தற்போது ஆம்பன் புயல் நிலை கொண்டுள்ளது. மத்திய வங்கக் கடல், மேற்கு வங்கக் கடல் பகுதி கொந்தளிப்போடு காணப்படும். நாளை புயல் கரையை கடக்கும்போது அதன் பாதிப்பு மேற்கு வங்கம் மட்டுமின்றி, ஒடிசாவிலும் இருக்க கூடும்.ஆம்பன் புயல் கரையை கடக்கும் போது, அதிகபட்சமாக 170கிமீ வேகத்தில் புயல் காற்று வீசும் என்று தெரிவித்துள்ளது. சேலம் அணைக்கட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அரூர், காவேரிபாக்கம், பாப்பிரெட்டிப்பட்டியில் தலா 2 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.


Tags : storm , Ambon, Storm, Storm, Rain, Meteorological Center
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...