வாஷிங்டன் : கோடை காலத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கும் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. கோடை காலத்தில் கொரோனாவின் தாக்கம் குறையும் என்றும் வெயில் மூலம் வரும் புற ஊதா கதிர்கள் கொரோனாவை கட்டுப்படுத்தும் என்றும் பரவலாக ஒரு தகவல்கள் உலகம் முழுவதும் உலாவி வந்தன. காற்று மற்றும் நிலப்பரப்பில் இருக்கும் கொரோனவை சூரிய ஒளி கொல்கிறது என்றும் அதோடு வெயிலின் தாக்கம் காரணமாக கொரோனா பரவும் வேகம் பெரிய அளவில் குறையும் என்றும் செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன.
இது குறித்து பிரின்ஸ்டன் குழுவினர் நடத்திய ஆய்வில், கோடைக்கும் கொரோனா பரவலுக்கும் மிக சிறிய அளவிலான தொடர்பு மட்டுமே உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.எனவே கோடைகாலத்தில் கொரோனா பயமின்றி இருக்கலாம் என யாரும் கருத வேண்டாம் என்றும், பலனளிக்கக்கூடிய கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால் வெப்பம் மிகுந்த, ஈரப்பதம் நிறைந்த காலநிலையிலும் கொரோனா தாக்குதல் அதிகம் நிகழும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.இந்த ஆய்வு முடிவுகள் மருத்துவ இதழான சயன்ஸ்-ல் வெளியிடப்பட்டுள்ளது.