×

பணியாளர்கள் 40-60 நிமிடத்திற்கு ஒருமுறை கை கழுவ வேண்டும் : அலுவலகங்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

டெல்லி : அலுவலகங்களுக்கான புதிய கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் பச்சை,ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஏற்கனவே ஊரடங்கில் சில கட்டுப்பாடு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள அலுவலகங்களுக்கான கொரோனா தடுப்பு பற்றிய பாதுகாப்பு  வழிகாட்டுதலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், ஒரு அலுவலகத்தில் ஒன்றிரண்டு கொரோனா பாதிப்பு இருந்தால் முழுமையாக அலுவலகத்தை மூட வேண்டியதில்லை,அலுவலகங்களில் கிருமிநாசினி தெளித்துவிட்டு வழக்கமான பணிகளைத் தொடரலாம் போன்ற வழிமுறைகள் இடம்பெற்றுள்ளன.
    
கட்டாயமான விதிகள்

*முடிந்த அளவு நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணியை மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும்.
    
*அனைத்து நிறுவனங்களிலும் தெர்மல் சோதனை கருவிகள் இருக்க வேண்டும்.
    
*எல்லா அலுவலகத்திலும் கிருமி நாசினிகளை வைக்க வேண்டும்.
    
*அதேபோல் குறைந்த அளவில் பணியாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். ஷிப்ட் முறையில் பணியாளர்களை பணிக்கு அழைக்கலாம்.
    
*உணவு இடைவேளை ஒரே நேரத்தில் இருக்க கூடாது. ஒரே நேரத்தில் ஒன்றாக கூட கூடாது.
    
*பணியாளர்கள் 40-60 நிமிடத்திற்கு ஒருமுறை கை கழுவ வேண்டும்.
    
*எல்லோரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். தனிப்பட்ட வகையில் பணியாளர்களின் உடல் நிலையை அடிக்கடி சோதனை செய்ய வேண்டும்.

அலுவலகங்களுக்கான தடுப்பு வழிகள்

*கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை பெரிய அளவில் இருந்தால் 48 மணி நேரத்திற்கு அலுவலகத்தை மூட வேண்டும்
    
*காய்ச்சல் உள்ளிட்ட உடல்நிலை பிரச்னை இருந்தால் பணிக்கு வரக்கூடாது.

*கட்டுப்பாட்டு பகுதியில் இருப்பவர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதிக்க வேண்டும்.

*வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து வரும் அனைவரையும் பரிசோதனை செய்ய வேண்டும்.
    
*சுவாசக் கோளாறு இருக்க கூடிய அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
    
*காய்ச்சல் உள்ளவர்கள் உடனே மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்ய வேண்டும். கொரோனா உறுதியானால் உடனே அலுவலகத்திடம் அறிவிக்க வேண்டும்

*அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை தான் செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் அறிகுறி ஏற்பட்டால் என்ன செய்வது

*அலுவலகத்தில் ஒருவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டால் அவரை தனிமைப்படுத்த வேண்டும்.

*அவருக்கு மாஸ்க் கொடுத்து தனியறையில் வைக்க வேண்டும். மருத்துவருக்கு போன் செய்து அலுவலகம் வர வைக்கலாம்.

*சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கலாம். 1075 என்ற மத்திய அரசின் இலவச உதவி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். அதன்பின் அவரின் உடல்நிலையை பொறுத்து முடிவு எடுக்கலாம்

அலுவலகத்தை மூடுதல்

*அலுவலகத்தில் ஒருவருக்கு மட்டும் கொரோனா ஏற்பட்டால் மொத்தமாக அலுவலகத்தை மூட வேண்டியது இல்லை.

*அலுவலகம் முழுக்க கிருமிநாசினி கொண்டு கழுவ வேண்டும். ஆனால் அலுவலகத்தில் நிறைய பேருக்கு கொரோனா ஏற்பட்டால் உடனடியாக அலுவலகத்தை மூட வேண்டும்.

*கொரோனா ஏற்படாத மற்ற நபர்களை வீட்டில் தனிமைப்படுத்த வேண்டும்.

Tags : government ,offices , Corona, prevention, mechanisms, publishing, offices
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...