திருச்செந்தூர்: திருச்செந்தூர் குமாரபுரம் அருகில் உள்ள மாவீரர் நகரில் மொத்தம் உள்ள 86 வீடுகளில் 48 வீடுகளில் 189 பேர் வசித்து வருகின்றனர். இதில் 49வயதுள்ள கூலித்தொழிலாளிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, திருச்செந்தூர் அரசு மருத்து வமனையில் இருந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவரது மனைவி மற்றும் மகன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். திருச்செந்தூர் அரசு மருத் துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவு மூடி சீல்வைக்கப்பட்டு, அங்கு பணியிலிருந்த மருத்துவர்கள் மற்றும் 2 செவிலியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
மாவீரர்நகர் நுழைவாயில் அருகே காவல்துறை சார்பில் தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டு, அப்பகுதிக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் தாலுகா இன்ஸ்பெக்டர் முத்துராமன் தலைமையிலான போலீசார் அங்கு தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஆறுமுகநேரி சுகாதார ஆய்வாளர் ஆனந்தராஜ் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் மாவீரர்நகரில் முதற்கட்டமாக 3 கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்ட 7 பேருக்கு ரத்தமாதரிகளை சோதனைக்கு எடுத்துச்சென்றுள்ளனர்.