×

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்குஇடைநிலை மூலதன கடனுதவி: முதல்வர் வழங்கினார்

சென்னை: உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு இடைநிலை மூலதன கடனுதவியாக 3 நிறுவனங்களுக்கு தலா 10 லட்சத்தை முதல்வர் எடப்பாடி வழங்கினார். கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை 113 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்,  நுகர்வோருக்கு நியாயமான விலையில் காய்கறிகளை விற்பனை செய்துள்ளனர். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தரமான வேளாண் பொருட்களை கொள்முதல் செய்வதற்காக விவசாயிகளுக்கு முன்பணம் செலுத்தவும், கொள்முதல் செய்த பொருட்களை பதப்படுத்தி சரியான முறையில் சிப்பம் கட்டி, அதை நேரடியாக நுகர்வோருக்கு கொண்டு செல்லவும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு போதிய நிதி தேவைப்படுகிறது.

இந்த நிதி தேவையை பூர்த்தி செய்யும் வகையில் முதல்வர், கொரோனா ஊரடங்கு நேரத்தில் காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர உணவு பொருட்களை சேகரித்து விநியோகம் செய்ய முன்வரும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தலா பத்து லட்சம் ரூபாய் வரை  “இடைநிலை மூலதன கடன் உதவி’’ வழங்கப்படும் என்று கடந்த 7.4.2020 அன்று அறிவித்தார்.  இந்த நிதியை பெறுகின்ற உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மேற்கண்ட காரணங்களுக்காக நிதியை பயன்படுத்தி, ஐந்தாம் ஆண்டின் முடிவில் இந்த இடைநிலை மூலதன நிதியினை திருப்பி செலுத்த வேண்டும்.

அந்த வகையில், தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில், 22 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு இடைநிலை மூலதன கடனுதவி வழங்கிடும் அடையாளமாக, கரிகாலன் பல்சஸ் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்-திருவாரூர், மேல்மலையனூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்-விழுப்புரம் மற்றும் கழனி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்-ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த மூன்று உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தலா ₹10 லட்சத்துக்கான காசோலைகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு, தலைமை செயலாளர் சண்முகம், வேளாண்மை துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : CM , Tiller Manufacturer Companies, Capital Financing, CM
× RELATED தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகாசியில் 7 செ.மீ. மழை பதிவு..!!