திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களில் வட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். தற்போது ஊரடங்கு காரணமாக இவர்கள் வேலை இழந்து வருமானமின்றித் தவிப்பதால் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல விருப்பம் தெரிவித்தனர். அதன்படி, ஒடிசா மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 2,891 தொழிலாளர்களை சிறப்பு ரயிலில் சொந்த ஊர்களுக்கு அனுப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
அவர்கள் அந்தந்த பகுதி தாலுகா அலுவலகங்களில் இருந்து நேற்று முன்தினம் மதியம் அரசு பஸ்கள் மூலம் திருவள்ளூர் ரயில் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் மாலை 4 மணிக்கு சிறப்பு ரயில் மூலம் ஒடிசா புறப்பட்டனர். தொடர்ந்து இரவு 8 மணிக்கு பீகார் மாநிலத்துக்கு மற்றொரு சிறப்பு ரயில் புறப்பட்டு சென்றது. இரு சிறப்பு ரயில்களிலும் மொத்தம் 2,891 பேர் சென்றனர்.