×

புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறப்பு; காலை 7 முதல் இரவு 7 வரை விற்பனைக்கு மட்டும் அனுமதி...மாநில முதல்வர் நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் கடந்த 11-ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர்  மோடி ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, 5வது முறையாக கடந்த 12-ம் தேதி இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, நாட்டின் 4ம் கட்ட தேசிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவது மற்றவற்றில் இருந்து  முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும்.

4ம் கட்ட ஊரடங்கை நீட்டிப்பது பற்றி மாநில அரசுகளே முடிவெடுக்கலாம். மாநில அரசுகளின் பரிந்துரைப்படி 4ம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்படும். இதுதொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மே 18ம் தேதிக்கு முன் வெளியிடப்படும்  என்றார். அதன்படி, 4-ம் கட்ட ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது.

இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், ஊரடங்கு தொடர்பான கட்டுப்பாடுகள், தளர்வுகள் குறித்து விவாரிக்கப்பட்டது. தொடர்ந்து, மாநிலத்தில் மதுக்கடைகள் நாளை  முதல் திறக்கப்படும் என்றும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என புதுச்சேரி முதல்வர் நாராயாணசாமி தெரிவித்துள்ளார். மது விற்பனைக்கு மட்டுமே அனுமதி; அமர்ந்து சாப்பிட  அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உள்ளூர் பேருந்துகள் தனிமனித இடைவெளியுடம் இயக்கவும், அனைத்து வணிக வளாகங்களும், தொழிற்சாலைகளும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி,. மே 31-ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடரவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒருவர் உயிரிழந்த நிலையில், 9 பேர் குணமடைந்துள்ளனர். அங்கு, கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிரிழக்கவும் இல்லை, பாதிக்கவும் இல்லை,  குணமடையவும் இல்லை. இந்தியளவில் கொரோனா பாதிப்புள்ள மாநிலங்களின் பட்டியில் 26-வது இடத்தில் புதுச்சேரி மாநிலம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற மாநிலங்களின் கட்டுப்பாடு:

இதற்கிடையே, இந்தியளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில்   ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்தது. தொடர்ந்து தமிழக அரசும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்தது. மேலும், 25 மாவட்டங்களில் போக்குவரத்து சேவைக்கும் அனுமதி  அளித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்திலும் அடுத்த 3 மாதங்களுக்கு 144 தடை  உத்தரவை நீட்டித்து முதல்வர் பூபேஷ் பாகேல் உத்தரவிட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஞாயிற்று கிழமை மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் பேருந்து, ரயில் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா, ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட 4 மாநிலத்தவர்கள் கர்நாடகா மாநிலம் வரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Tags : Narayanasamy ,liquor stores ,Puducherry , Open liquor stores in Puducherry tomorrow Only for sale from 7 am to 7 pm ... Interview with State Chief Minister Narayanasamy
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளர், கட்சி...