×

புகையிலை புரதத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி உருவாக்கிய லண்டன் சிகரெட் தயாரிப்பு நிறுவனம்: மனிதர்களுக்கு பயன்படுத்த தயார் நிலை

லண்டன்:  லண்டனில் உள்ள டொபாக்கோ நிறுவனம் ஒன்று கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. உலகை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸை மொத்தமாகப் புவியிலிருந்து விரட்டியடிப்பதற்கு மருந்து அல்லது தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என அறிவியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.ஆனால் இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருடத்தில்தான் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அனைத்து நாடுகளும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவ்வப்போது இருக்கும் அறிகுறிகளுக்கு ஏற்றவாறு அந்தந்த நாட்டு மருத்துவர்கள் நிர்ணயித்த மருந்துகள் மட்டுமே தற்போது வரை வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறான சூழ்நிலையில், உலகின் முன்னணி சிகரெட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ, புகையிலை புரதத்தில் இருந்து தடுப்பூசி கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.இந்த தடுப்பூசியை சோதித்துப் பார்த்ததில் நல்ல பலன் கிடைத்ததாகவும் மனிதனின் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியை இந்த வைரஸிற்கு எதிராக போராட தூண்டிவிட்டு இந்த வைரஸை அழித்துவிட முடியும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. லண்டனில் இருக்கும் இந்த நிறுவனம், தான் உருவாக்கியுள்ள தடுப்பூசி, மருத்துவமனை சோதனைக்கு முந்தைய கட்டத்தில் உள்ளதாகவும், எப்போது வேண்டுமானாலும் மனிதர்களிடம் அதை பரிசோதிக்கலாம் என்றும் கூறியுள்ளது.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறையின் அனுமதி கிடைத்தால் மனிதர்களிடம் சோதனை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ள இந்த நிறுவனம், மற்ற மருந்துகள் தயாரிக்க எடுக்கும் நேரங்களை விட குறைந்த நேரங்களில் இந்த மருந்தை தயாரித்து விடலாம் எனவும் கூறியுள்ளது.ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட பத்து லட்சம் முதல் முப்பது லட்சம் மருந்துகள் தயாரித்து விடலாம் என்று இந்நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Cigarette Production Company ,London ,London Cigarette Production Company ,Corona Vaccine , Tobacco, Protein, Corona, Vaccine, London, Cigarette, Product, Company
× RELATED லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸில் படித்த...