சென்னை : சென்னையில் தினசரி பதிவாகும் பாதிப்புகளில் 60 சதவீதம் நோய் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஏற்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.சென்னை மாநகராட்சியில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மட்டும் சென்னையில் 332 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை சேர்த்து சென்னையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,271 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,213 பேர் குணமடைந்துள்ளனர். 51 பேர் உயிரிழந்துள்ளனர். 4,979 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தவிர்த்து பிற மாநிலங்களைச் சேர்ந்த 28 பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று முன்தினம் பாதிக்கப்பட்ட 332 போரில் 238 பேர் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள். 94 பேர் கட்டுப்பாடு இல்லாத பகுதியில் வசிப்பவர்கள். இதன்படி பார்த்தால் சென்னையில் 60 சதவீத பாதிப்புகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஏற்படுகிறது. மண்டலம் வாரியாக பார்க்கும்போது ராயபுரத்தில் 1112 பேர் , கோடம்பாக்கத்தில் 973 பேர் திருவிக நகரில் 750 பேர் தேனாம்பேட்டையில் 669 பேர், தண்டையார்பேட்டையில் 528 பேர், அண்ணாநகரில் 514 பேர், வளசரவாக்கத்தில் 494 பேர்,அடையாரில் 334 பேர் , அம்பத்தூரில் 304 பேர், திருவொற்றியூரில் 137 பேர் மாதவரத்தில் 105 பேர், மணலியில் 84பேர், சோழிங்கநல்லூரில் 82 பேர்,பெருங்குடியில் 80 பேர், ஆலந்தூரில் 77 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 60.84 சதவீதம் ஆண்கள், 39.12 சதவீதம் பெண்களும், திருநங்கை மூன்று பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.