திருவனந்தபுரம்: கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினரைப்போல போலீசாரும் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக ஏராளமான போலீசாருக்கும் கொரோனா பரவி வருகிறது. இதையடுத்து கேரளாவில் போலீசாருக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆராய 2 ஏடிஜிபி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஆய்வு நடத்தி சில பரிந்துரைகளை அளித்தது. அந்த பரிந்துரைகளை நேற்று முதல் அமல்படுத்துமாறு அனைத்து மாவட்ட எஸ்பிக்களுக்கும் கேரள டிஜிபி லோக்நாத் பெக்ரா சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அதில், தினமும் வாகன பரிசோதனை நடத்த தேவையில்லை. கடுமையான குற்றங்களுக்கு மட்டுமே கைது செய்தால் போதும். அபராதத்தை வங்கிகளில் செலுத்த வலியுறுத்த வேண்டும்.
போலீஸ் நிலையங்கள் மற்றும் அலுவலகங்களில் 50 சதவீத பேர் மட்டுமே பணிபுரிந்தால்போதும். மீதம் உள்ளவர்களுக்கு ஓய்வளிக்க வேண்டும். 1 வாரம் வேலை, 1 வாரம் ஓய்வு என பணியை ஒழுங்குபடுத்த வேண்டும். போலீசார் காவல் நிலையங்களுக்கு வராமல் நேரடியாக பணியிடத்துக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். பொதுமக்கள் காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்க நேரடியாக வருவதை முடிந்தவரை குறைக்க முயற்சிக்க வேண்டும். அதற்கு பதிலாக வாட்ஸ்-அப், ஈ-மெயில் என புகார்களை அனுப்பலாம். என்று கூறப்பட்டு ள்ளது.