மீனம்பாக்கம்: சீனா மற்றும் சவுதியில் இருந்து கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் சென்னை வந்தன. கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பாதிப்பு தொடர்ந்து உச்சநிலையில் உள்ளது. இதனால் தமிழ்நாட்டிற்கு அதிகமான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தேவைப்படுகிறது. இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து மருத்துவ உபகரணங்கள் அதிக அளவு இறக்குமதி செய்யப்படுகின்றன.
அதன்படி, சென்னை சர்வதேச விமான நிலைய சரக்ககத்திற்கு நேற்று முன்தினம் இரவு வந்த சரக்கு விமானத்தில் 142 பார்சல்களில் மருத்துவ உபகரணங்கள் வந்தன. அதில் 82 பார்சல்களில் N95 மாஸ்க்குகள், மருந்து பொருட்கள் சவுதி அரேபியாவிலிருந்தும், 60 பார்சல்களில் உயிர்காக்கும் சுவாசக்கருவியான வென்டிலேட்டர் உதிரி பாகங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் சீனாவிலிருந்தும் வந்தன. மருத்துவ உபகரணங்களுக்கு முன்னுரிமை அளித்து உடனடியாக சுங்கச் சோதனைகள் முடிந்து டெலிவரி செய்யப்பட்டன.