பெரம்பூர்: சென்னை பேசின் பிரிட்ஜ் புளியந்தோப்பு மோதிலால் தெருவை சேர்ந்த 45 வயது பெண், கடந்த சில மாதங்களாக காச நோயால் அவதிப்பட்டு வந்தார். கடந்த மாதம் 8ம் தேதி இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு ரத்த பரிசோதனை செய்தபோது, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், சிறப்பு வார்டில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடல் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புடன் நேற்று மூலக்கொத்தளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
புழல்: புழல் கங்காதரன் தெருவை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவன், கதிர்வேடு சிவராஜ் தெருவை சேர்ந்த 25 வயது, 22 வயது அக்கா தங்கை, 19 வயது தம்பி, 19 வயது நபர், விநாயகபுரத்தை சேர்ந்த ஊர்க்காவல் படையை சேர்ந்த 35 வயது நபர், அவரது 53 வயது மாமனார், 48 வயது மாமியார், 43 வயது ஆட்டோ ஓட்டுனர் ஆகிய 9 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அம்பத்தூர்: அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, கொரட்டூர், பாடி, ஜெ.ஜெ.நகர், பாடிகுப்பம், அண்ணாநகர் மேற்கு விரிவு ஆகிய பகுதிகளில் போலீஸ் உதவி ஆய்வாளர், காவலர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என 300க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாம்பரம்: மேற்கு தாம்பரம் அய்யாசாமி தெருவில் உள்ள மருந்து கம்பெனியில் வேலை செய்து வந்த பெண் ஊழியருக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவருடன் வேலை செய்த ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தபோது,ஒரு பெண் ஊழியருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. அதேபோல், இரும்புலியூரில் மென் பொறியாளர் ஒருவர் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.
தண்டையார்பேட்டை : ராயபுரம் மண்டலத்தில் நாட்டு பிள்ளையார் கோயில் தெரு, வரதமுத்தையா தெரு, ஆச்சாரப்பன் தெரு, அண்ணாபிள்ளை தெரு, ஏழுகிணறு மற்றும் முத்தியால்பேட்டை பகுதிகளில் 20 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.