×

சோழவந்தானில் கொடூரம்: 4வதாக பிறந்த பெண் சிசு எருக்கம்பால் ஊற்றிக் கொலை: தந்தை, பாட்டி கைது

சோழவந்தான்: சோழவந்தானில் பெண் சிசுவை எருக்கம் பால் ஊற்றி கொடூரமாக கொலை செய்த தந்தை மற்றும் பாட்டியை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம், சோழவந்தான் பூமேட்டு தெருவை சேர்ந்தவர்கள் தவமணி - சித்ரா தம்பதி. இவர்களுக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 10ம் தேதி, 4வதாகவும் பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தை உடல் நலக்குறைவால் கடந்த 14ம் தேதி இறந்துவிட்டதாக கூறி வைகைக் கரையோரம் புதைத்து விட்டனர். சந்தேகத்தின் பேரில் விஏஓ சமயன் புகாரின்படி சோழவந்தான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

வாடிப்பட்டி தாசில்தார் கிருஷ்ணகுமார், டிஎஸ்பி ஆனந்த் ஆரோக்கிய ராஜ் முன்னிலையில் சிசுவின் சடலம் நேற்று முன்தினம் தோண்டி எடுக்கப்பட்டு மதுரை மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவக் குழுவினர் அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்தனர். அதுவரை இயற்கை மரணம் என கூறி வந்த தவமணியும், அவரது தாயாரும் பிரேத பரிசோதனையில் உண்மை தெரியவரும் என பயந்து நேற்று ஆர்ஐ ராஜன், விஏஓ நைனார்முகமது ஆகியோர் முன்னிலையில் சரணடைந்தனர். இருவரையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்ததில், நான்காவதாக பெண் குழந்தை பிறந்ததால் வேதனையில் இருந்தோம்.

14ம் தேதி தாய் சித்ரா வெளியில் சென்ற நேரத்தில் குழந்தைக்கு எருக்கம்பால் ஊற்றினோம். சிறிது நேரத்தில் குழந்தை வாந்தி எடுத்து இறந்தது. இயற்கையாக இறந்தது போல் சமாளிக்க நினைத்தோம். பிரேத பரிசோதனையில் தெரிந்து விடும் என்பதால் உண்மையை ஒப்புக் கொண்டோம் என்றனர். இதையடுத்து தவமணி (33), அவரது தாய் பாண்டியம்மாள் (55) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பெண் குழந்தையை தந்தையும், பாட்டியும் சேர்ந்து கொன்ற சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : baby pills infant death ,infant , Cholavandan, born girl, poured murder, father, grandmother, arrested
× RELATED ‘லிவிங் டுகெதர்’ வாழ்க்கையில் பிறந்த...