×

காதல் திருமணம் ஒரு மாதத்திலேயே கசந்தது; போதையில் தாக்கிய கணவனை பழிவாங்க நூதன நாடகமாடிய இளம்பெண்: பொதுமக்கள், போலீசாரையும் அலையவிட்டார்

வேலூர்: வேலூர் கொணவட்டத்தைச் சேர்ந்தவர் 32 வயது வாலிபர், பழ வியாபாரி. இவர் 29 வயது இளம்பெண்ணை காதலித்து கடந்த மாதம் திருமணம் செய்துள்ளார். மதுப்பழக்கம் கொண்ட வாலிபர், நேற்று டாஸ்மாக் திறப்பதை அறிந்து காலையிலேயே வரிசையில் காத்திருந்து மது வாங்கி அதிகளவு குடித்துள்ளார். மாலையில் அவர், மதுபோதையில் தள்ளாடிபடியே வீட்டுக்கு வந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது இளம் மனைவி, ‘உனக்கு குடிப்பழக்கம் உள்ளதா, திருமணத்திற்கு முன் உனக்கு குடிப்பழக்கம் இருப்பது என்னிடம் மறைத்து விட்டாயே’ என்று கேட்டுள்ளார்.

இதனால் புதுமண தம்பதியிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த வாலிபர், மனைவியை சரமாரி தாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்து, ‘உன்னை நம்பி வந்த என் வாழ்க்கையை வீணாக்கிவிட்டாயே, நான் தற்கொலை செய்து கொள்கிறேன்’ என்று கூறியபடி வேலூர் கோட்டை அகழியை நோக்கி சென்றார். இளம்பெண்ணை அக்கம் பக்கத்தினர் தடுத்து நிறுத்த முயன்றும் முடியவில்லை. கோட்டை அகழியை நோக்கி அவர் ஓட்டம் பிடித்துள்ளார்.

பின்னர், அகழியில் உள்ள புதரில் மறைந்து கொண்ட அவர், அங்கிருந்த பெரிய கல்லை, அகழியில் தள்ளியுள்ளார். அவரை பின்தொடர்ந்து வந்தவர்கள், தண்ணீரில் கல் விழுந்த சத்தத்தை கேட்டு இளம்பெண் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அறிந்தனர். இதனால் வாலிபர்கள் சிலர் கோட்டை அகழியில் குதித்து இளம்பெண்ணை தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. தகவலறிந்து வந்த வேலூர் வடக்கு போலீசார், அரை மணி நேரத்துக்கு மேலானதால் இளம்பெண் இறந்திருப்பார் என்று நினைத்து சடலத்தை தேட தொடங்கினர்.

ஆனால் 1 மணிநேரத்துக்கு மேலாக புதரில் மறைந்திருந்த இளம்பெண் திடீரென வெளியே வந்தார். அவரை பார்த்தவுடன் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். அவரை போலீசார், போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். ஆனால் இதுபற்றி அறியாத அப்பெண்ணின் கணவர், வீட்டிலேயே குடிபோதையில் மயங்கி கிடந்தார்.

டாஸ்மாக்கால் இன்னும் நடக்கும்...
ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தபோது நிம்மதியாக இருந்தோம். இப்போது மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் வீட்டில் உள்ள பொருட்களை திருட்டு தனமாக அடகு வைத்து குடிப்பவர்களை எப்படிதிருத்த போகிறோம் என்று பெரும்பாலான பெண்கள் வேதனை தெரிவித்தனர்.

Tags : Teenagers ,teenager , Love marriage, teenagers
× RELATED திருவொற்றியூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் 2 பேர் சடலமாக மீட்பு