கூடலூர்: கூடலூர் நகராட்சிக்குட்பட்ட தோட்டமூலா, ஏழு முறம் குடியிருப்பு பகுதியில் நேற்று காலை நேரத்தில் வந்த யானையால் பரபரப்பு ஏற்பட்டது. காலை 7 மணியளவில் வந்த இந்த யானையை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டியபோது குடியிருப்பு பகுதிகளை ஒட்டி ஒடியதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த தினேஷ் என்பவரது கார் ஒன்றையும் யானை லேசாக சேதப்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு வருட காலமாக இடது பின்புற பகுதியில் காயத்துடன் திரியும் யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்துள்ள நிலையில் தற்போது கடந்த சில மாத காலமாக இப்பகுதிகளை ஒட்டி நடமாடி வருகின்றது. அதிகாலை நேரங்களில் அவ்வப்போது வரும் இந்த யானையால் இப்பகுதிகளில் வசிப்பவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
காலை நேரங்களில் நடைபயிற்சி செல்லும் சிலர் யானையிடம் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளனர். அடிக்கடி ஊருக்குள் வந்து பழகிவிட்ட இந்த காட்டு யானையை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினாலும் மீண்டும் மீண்டும் வருவதால் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பாக இந்த யானையை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும். அல்லது மயக்க ஊசி போட்டு பிடித்து முதுமலை முகாமிற்கு கொண்டு செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.