டெல்லி: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று, இந்தியாவிலும் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 90,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையில் 30,000-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் 10,585 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் மாநகரில் 6,278 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் 80% கொரோனா 30 நகராட்சி பகுதிகளில் இருந்தே வந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்தக்கட்ட ஊரடங்கில் இந்தக் குறிப்பிட்ட 30 இடங்களிலும் தளர்வுகள் குறைக்கப்படாமல் கண்காணிப்பு தொடரப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த 30 இடங்களை கவனமாக கையாளுமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது. ஆந்திரா, டெல்லி, குஜராத், மத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா,ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு,தெலங்கானா, மேற்கு வங்கம்,உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 30 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர்,கடலூர்,செங்கல்பட்டு, அரியலூர்,விழுப்புரம் உள்ளிட்ட இடங்கள் கவனமாக கையாளவேண்டிய இடங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நான்காம் கட்ட ஊரடங்கில் இந்தக் குறிப்பிட்ட பகுதிகளை அதிக கவனத்துடன் கையாள வேண்டுமென சுகாதாரத்துறை மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.