அம்பத்தூர்: மாதவரம் பால் பண்ணை பகுதியை சேர்ந்த நரேந்திரகுமார் (40) என்பவர், அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே அத்திப்பட்டு, நாகேஸ்வரராவ் தெருவில் காகித தொழிற்சாலை நடத்தி வருகிறார். இதில், ஓட்டல்களுக்கு தேவையான வண்ண காகிதங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஊரடங்கால் மூடப்பட்ட இந்த தொழிற்சாலை தளர்வு காரணமாக சமீபத்தில் திறக்கப்பட்டது. இங்கு தற்போது 3 ஊழியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இந்த தொழிற்சலையின் ஒரு பகுதியில் தீவிபத்து ஏற்பட்டது. இதை பார்த்த ஊழியர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால், முடியவில்லை.
தகவலறிந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை, ஜெ.ஜெ.நகர் பூந்தமல்லி, மாதவரம் ஆகிய பகுதிகளிலிருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் விரைந்து வந்து, 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் அங்கிருந்த இயந்திரங்கள், பிளாஸ்டிக் கேன்களில் இருந்த மூலப்பொருட்கள், காகிதம், அச்சிடப்பட்ட காகித பண்டல்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது தெரிந்தது. தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.