சென்னை: சரக்கு விமானத்தில் மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.35 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலைய சரக்கக பகுதியில் இருந்து நேற்று சரக்கு விமானம் ஒன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூர் புறப்பட இருந்தது. அதில், கொண்டு செல்லப்படும் பொருட்களை சுங்க அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட 5 மரப்பெட்டிகள் அந்த விமானத்தில் கொண்டு செல்லப்பட இருந்தது. அந்த பெட்டிகளின் மீது, எண்ணெய் விளக்குகள் என குறிப்பிடப்பட்டு இருந்தது. சுங்க அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில், ஒரு பெட்டியை பிரித்து பார்த்தபோது, அதில், செம்மரக்கட்டைகள் இருப்பது தெரிந்தது.
உடனே, 5 பெட்டிகளையும் பரித்து பார்த்தபோது மொத்தம் 1050 கிலோ செம்மரக்கட்டைகள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.35 லட்சம். பின்னர், அந்த மரப்பெட்டியில் இருந்த முகவரி, செல்போன் எண்ணில் தொடர்புகொண்டபோது, போலி என தெரியவந்தது.
இதையடுத்து அதை ஏற்றுமதி செய்வதற்காக பதிவு செய்திருந்த தனியார் ஏஜென்ட் அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது டெல்லியை சேர்ந்த ஒரு ஏற்றுமதியாளரின் வாகனத்தில் இந்த மரப்பெட்டி பார்சல்கள் கொண்டு வரப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த 50 நாட்களில் சரக்கு விமானங்களில் கடத்தப்படும் கடத்தல் பொருட்கள் பிடிபடுபதுவது இது மூன்றாவது முறையாகும்.