சென்னை: வெளிநாட்டு தொழில் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்ப்பதற்காக தலைமை செயலாளர் தலைமையிலான சிறப்பு பணி குழு கூட்டம் நேற்று நடந்தது.
கொரோனா வைரஸ் பரவல் உலக பொருளாதார சூழலில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளால், சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவிற்கு இடம் பெயர்ந்திட முடிவெடுத்துள்ளன. அந்த சூழ்நிலையை பயன்படுத்தி, அந்த முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்ப்பதற்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில், அரசு உயர் அதிகாரிகள், துறை தலைமை அதிகாரிகள், ஜப்பான், கொரியா, சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் தைவான் நாடுகளை சார்ந்த தொழில் கூட்டமைப்பினர்கள் அடங்கிய, முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்பு பணி குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு பணி குழுவின் முதல் கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் உள்ள கூட்டரங்கில் நடந்தது. தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் நடந்த கூட்டத்தில் அரசு உயர் அதிகாரிகள், கொரிய தொழில் கூட்டமைப்பின் இயக்குநர் ஜங்ஹி ஹான், தைவான் தொழில் கூட்டமைப்பின் இயக்குநர் தாவே ஸாய், ஹிண்டாய் நிறுவன மேலாண்மை இயக்குநர் எஸ்.எஸ்.கிம், தொழிலதிபர்கள் மல்லிகா சீனிவாசன், சக்திவேல், தர் வேம்பு, ஹரி தியாகராஜன், பொன்னுசாமி, பீட்டர் நிக்கல்சன், வைபவ் மித்தல், குருராஜ், அர்ஜித் சென், சீனிவாசன் சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை தெரிவித்தனர்.