×

சிலிண்டருக்கு தந்த காசில் குவாட்டர் கணவரை அடித்து கொன்றார் மனைவி: அனாதையான பிள்ளைகள்

பெங்களூரு: காஸ் சிலிண்டர் வாங்க கொடுத்த பணத்தில் மது வாங்கி குடித்து விட்டு வந்து அடித்த  கணவனை, மரக்கட்டையால் தாக்கி கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.  கர்நாடகாவின் கல்புர்கி மாவட்டத்தை சேர்ந்தவர் உமேஷ்  (45). இவருடைய மனைவி ஆஷா (35). இவர்கள் இருவரும் 12 ஆண்டுகளுக்கு முன்பு  வேலை தேடி பெங்களூரு வந்தனர். பசவனகுடி அருகே உள்ள கத்ரிகுப்பேயில் வசித்து  வந்த இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று  முன்தினம் இரவு கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம்  அடைந்த உமேஷ், மரக்கட்டையால் ஆஷாவை தாக்கினார். தொடர்ந்து தாக்க முயன்றபோது  கட்டையை ஆஷா பிடிங்கி  கணவனை திருப்பி தாக்கினார்.

இதில் பலத்த காயம்  அடைந்த உமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதையொட்டி ஆஷாவை பசவனகுடி போலீசார்  கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசில் ஆஷா கொடுத்த வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது: எனது கணவருக்கு குடிப்பழக்கம் உண்டு. தினமும்  குடித்துவிட்டு வந்து என்னை அடித்து உதைப்பது வழக்கம். அவர் சம்பாதிக்கும்  பணத்தை எல்லாம் குடிப்பதற்கே செலவழித்தார். இதுபற்றி கேட்டால் அடி உதைதான்  விழும். இந்நிலையில் வெள்ளிக்கிழமை அவரிடம் 500 ரூபாய் கொடுத்து காஸ்  சிலிண்டர் வாங்கி வரும்படி கூறினேன். ஆனால், அந்த பணத்தில் மது  வாங்கி குடித்துவிட்டு போதையில் வந்தார்.

இதுகுறித்து கேட்டபோது  எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது மரக்கட்டையால் கணவர் என்னை  தாக்கினார். உடனே நான் என்னை காப்பாற்றிக் கொள்ள அவரிடம் இருந்த  மரக்கட்டையை பிடுங்கி திருப்பி தாக்கினேன். இதில் அவரது தலையில் பலத்த  காயம் ஏற்பட்டு இறந்து விட்டார். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இந்த  சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தந்தை இறந்தார்,  சிறையில் தாய் என்ற நிலையில் அனாதையான இரு பிள்ளைகளும் உறவினர்கள்  பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டனர்.


Tags : Cassil Quarter ,death ,cylinder wife , Cylinder, Quarter, Husband, Wife
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு