கும்பகோணம்: மக்களை பற்றி கவலைப்படாமல் கஜானாவை நிரப்பவே அரசு கவனம் செலுத்துகிறது என்று கும்பகோணத்தில் முத்தரசன் குற்றச்சாட்டியுள்ளார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று அளித்த பேட்டி: மத்திய அரசு ஒற்றை பைசா கூட மக்களுக்கு நேரடியாக வழங்கவில்லை. இலவச ஆலோசனை மட்டும் வழங்கி வருகிறது. வெறும்கையால் முழம் போடுவதுபோல் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. கடந்த 12ம் தேதி பிரதமர் ரூ.20 லட்சம் கோடிக்கு பொருளாதார நடவடிக்கைகளை அறிவித்தார். இதைதொடர்ந்து கடந்த 3 நாட்களாக நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுகிறார்.
இந்த அறிவிப்பு அனைத்தும் ஏமாற்றும், வெற்று அறிவிப்புகளாகவே உள்ளது. மாநில அரசுகளுக்கு உரியநிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். வங்கிகளில் பெற்றுள்ள அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு ரூ.1,000 கொடுத்தால் மட்டும் போதும் என்று மாநில அரசு நினைக்கிறது. ஆனால் இந்த பிரச்னை இதோடு முடியாது. விவசாயிகள் காப்பாற்றப்பட வேண்டும். சிறு, குறு தொழில்கள் காப்பாற்றப்பட வேண்டும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தபட்சமாக ரூ.5,000 வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தோம்.
இதையெல்லாம் ஏற்காத சூழலில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வரும் 19ம்தேதி நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தமிழகத்தில் 3000 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தமிழக அரசு பிடிவாதமான முறையில் உச்சநீதிமன்றம் சென்று டாஸ்மாக் கடைகளை திறந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவால் 10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் பல பத்தாயிரமாக அதிகரிக்க டாஸ்மாக் கடைகள் அமையவிருக்கிறது. மக்களை பற்றி கவலைப்படாமல் கஜானாவை நிரப்பவே தமிழக அரசு கவனம் செலுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.