×

கொரோனா தொற்று குறித்து கவலைப்படாமல் மக்கள் பணியாற்றிய திமுக நிர்வாகிகளின் தொண்டுள்ளத்துக்கு தலைவணங்குகிறேன்: மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: கொரோனா தொற்று குறித்து கவலைப்படாமல் மக்கள் பணியாற்றிய திமுக நிர்வாகிகளின் அரிய தொண்டுள்ளத்துக்கு தலைவணங்குகிறேன் என்று மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: எத்தனை எத்தனையோ சரித்திர ஏடுகளையும், ஏடுகளின் மூலம் மாற்றங்களையும் கண்ட திமுகவின் லட்சியப் பயணத்தில், இதுவரை இப்படி ஒரு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்ததே இல்லை என்று புதுமையாகச் சொல்லக் கூடிய அளவில், இன்றைக்குக் காணொலிக் காட்சி மூலமாகவே விரிவான கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

கொரோனா நோய்த் தொற்று பரவிவருகிறது என்று சொல்லி, வீட்டுக்குள் முடங்கி இருக்கவில்லை திமுக. முன்களத்தில் நின்று முயன்று அயராது பணியாற்றினார்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்கள். மக்கள் அவசியம் தேவையென எதிர்பார்க்கும் அனைத்தையும், குமரி முதல் சென்னை வரை அனைத்து மாவட்டங்களிலும் வழங்கியதாக மாவட்டச் செயலாளர்கள், ஊர் வாரியாக, நகர் வாரியாக புள்ளிவிவரங்களுடன் எடுத்துரைத்தார்கள்.  உணவுப் பொருளைத் தயாரித்து, அதனைத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடம் வழங்கும் ‘ஏழைகளுக்கு உணவளிப்போம்’’, ‘’நல்லோர் கூடம்’’ என்ற திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் மாவட்டச் செயலாளர்கள் விளக்கிச் சொன்னார்கள்.

 எங்களுக்கு வந்த அழைப்புகளில் பெரும்பாலானவை அரசாங்கம், மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி நிர்வாகம், சுகாதாரத்துறை ஆகியவற்றால் மட்டுமே செய்ய முடிந்தவை. மக்கள் வைக்கின்ற கோரிக்கைகளைப் பார்க்கும்போது, இந்த நாட்டில் ஆட்சி என்ற ஒன்று இருக்கிறதா? முதலமைச்சர் என்ற ஒருவர் இருக்கிறாரா? அமைச்சர்கள் செயல்படுகிறார்களா? - என்ற ஐயப்பாடே எழுகிறது. அந்தளவுக்கு மக்கள் எல்லா வகையிலும் துன்ப துயரங்களை அனுபவித்து வருகிறார்கள்.  கோயம்பேடு சந்தைக்கு மாற்று இடத்தை ஏற்பாடு செய்திருந்தாலோ அல்லது அதனை முறையான கண்காணிப்புடன் நடத்தி இருந்தாலோ கொரோனா பரவாமல் தடுத்திருக்கலாம். அரசாங்கத்துக்கு முன்யோசனை இல்லாததே இதற்குக் காரணம் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தார்கள்.

டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது, நோய்த்தொற்றை அதிகரித்துப் பரவலாக்கிடக் காரணமாகிவிடக்கூடும் என்றும் அச்சம் தெரிவித்தார்கள். மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குத் திட்டமிட்ட முயற்சி எதுவும் எடுக்காத தமிழக அரசு, டாஸ்மாக் கடைத் திறப்புக்கு மட்டும் திருவிழா ஏற்பாடுகளைப் போல எண்ணி, துரிதமாகச் செயல்படுவதைப் போன்ற பொறுப்பற்ற தன்மை வேறு இருக்க முடியாது.  இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இப்படியொரு மக்கள் சேவையை கொரோனா காலத்தில் எந்த அரசியல் கட்சியும் இந்தளவுக்குச் செய்ததாகத் தகவல் இல்லை என்பதைப் பெருமையோடு பதிவு செய்திட விரும்புகிறேன். ஒரு அரசாங்கமும், பல ஆயிரம் தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து செய்ய வேண்டிய அளவிலான பெரிய செயலை, திமுக என்ற அரசியல் அமைப்பு, செய்து காட்டியுள்ளது.

இது சாதாரணமான நேரம் அல்ல, கொரோனா நோய்த்தொற்று காலம். இச்சேவையில் ஈடுபடும் நிர்வாகிகளும் இதற்கு ஆளாகக் கூடும். ஆனால் அதைப்பற்றிக் கவலைப்படாமல், திமுக நிர்வாகிகள் மக்கள் பணியாற்றினார்கள். இவர்கள் அனைவருடைய அரிய தொண்டுள்ளத்துக்கும் நான் தலைவணங்குகிறேன்.
பேராபத்துக் காலத்தில் திமுக எப்படிச் செயல்படும் என்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டி இருக்கிறோம். திமுக நிர்வாகிகள் எத்தகைய தொண்டுள்ளத்துடன் செயல்படும் வீரர்கள் என்பதைத் தலைமைக்கும் காட்டி இருக்கிறார்கள்.

பேரறிஞர் அண்ணா ஆசைப்படும் அரும்பணியாளர்களாக, முத்தமிழறிஞர் கலைஞர்  விரும்பும் களப்பணியாளர்களாக திமுகவினர் அனைவரும் செம்மாந்து நிற்பதைப் பார்த்து, இந்த இயக்கத்தை வழிநடத்திச் செல்லும் தலைமைத் தொண்டன்  என்கிற வகையில் மகிழ்கிறேன்.இன்னும் நம் முன் ஏராளமான பணிகள் எதிர்பார்த்து அணிவகுத்து நிற்கின்றன. அப்பணிகள் குறித்த திட்டமிடுதல்களுடன் இன்றைய மாவட்டச் செயலாளர் கூட்டத்தை நிறைவு செய்துள்ளோம். முன்னெப்போதும் போலவே, கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு போற்றி, கொரோனா காலக் களப்பணிகளும் தொய்வின்றித் தொடரும்.  நம் கடன் நாள்தோறும் மக்கள் பணியே.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : executives ,DMK ,corona epidemic ,MK Stalin ,charity , rona, People's Work, DMK Administrators, MK Stalin
× RELATED திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்