கோவை: கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்நிலையில், இந்த வைரஸ் அச்சுறுத்தலால் பல நாடுகளிலும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அது போல இந்தியாவிலும் கடந்த 50 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனவே பேருந்துகளும் இயக்கப்படாமல் அப்படியே நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், வைரஸின் தாக்கம் குறையாததாலும் மக்கள் அவதிப்படுவதாலும் சில தளர்வுகளை அரசாங்கம் அறிவித்து வருகிறது. அதில் ஒன்றாக பேருந்து இயக்கமும் உள்ளது.
தமிழகத்தில் கோவை, சேலம் ஆகிய இடங்களில் சில மாவட்டங்கள் கொரோனா இல்லாத இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த மாவட்டங்கள் சிலவற்றிற்கு மட்டும் சேவையை தொடங்க ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிய வந்தன. இந்நிலையில் கோவை போக்குவரத்து மண்டலத்தில் வரும் 18-ம் தேதி முதல் 50% பேருந்துகள் இயக்கப்படுவதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை சார்பில் இந்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கோவை மேற்கு, கிழக்கு மண்டலத்தில் மாநகராட்சி பகுதிக்கு உட்பட இடங்களில் 329 மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும் வழக்கமாக 60 இருக்கைகள் உள்ள பேருந்துகளில் 33 இருக்கைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. கோவை மண்டலத்தில் தலைமை அலுவலகக் கிளை, உப்பிலிபாளையம், சுங்கம்-1,2, ஒண்டிப்புதூர்-1,2,3, உக்கடம்-1,2, அன்னூர், மருதமலை, கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதில் பொள்ளாச்சிக்கு 56 பேருந்துகளும், வால்பாறைக்கு 18 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
* அதேபோன்று கோவையில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு செல்லும் பேரூந்துகளின் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
* அதில் மதுரை, திருச்சி, ஈரோடு, திருப்பூர் மாவட்ட பேருந்துகள் அதிகமாக இடம் பெற்றுள்ளன.
* திருநெல்வேலி 1 பேருந்து இயக்கப்பட்டுள்ளது.
* மாநகராட்சி பேருந்துகள் கிளம்பும் இடம், நேரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அளிக்கப்பட்டுள்ளன.
* அனைத்து பேருந்துகளிலும் இருக்கைகள் பேருந்துகளுக்கு ஏற்ப குறைக்கப்பட்டுள்ளன.