திருமங்கலம்: திருமங்கலம் அருகே பலத்த மழைக்கு பழமையான கோயில் சுவர் இடிந்து விழுந்ததால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது கள்ளிக்குடி கிராமம். இங்கு பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான மீனாட்சி-சொக்கநாதர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் கற்களால் கட்டப்பட்டுள்ளது. இதனை புனரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
கள்ளிக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்றிரவு சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இந்த மழைக்கு கோயில் வளாகத்திலுள்ள மீனாட்சியம்மன் கருவறை சுவர் இடிந்து விழுந்தது. இது பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கோயிலை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.