சாத்தான்குளம்: பெரியதாழையில் தூண்டில் வளைவு நீட்டிக்கும் பணி தொடங்காததால் தொடர் கடலரிப்பால் மீன்பிடிக்க செல்ல முடியாமல் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சாத்தான்குளம் தாலுகாக்குட்பட்ட பெரியதாழையில் 400க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர். இதில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவ தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர். பெரியதாழையில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்டு வந்ததால் மீனவர்கள் கோரிக்கையை ஏற்று 4 ஆண்டுகளுக்கு முன் ரூ.25 கோடியில் கிழக்கு, மேற்கு பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டது. இதில் ஒரு பகுதியில் குறைவாக அமைக்கப்பட்டதால் கடல் சீற்றத்தால் கடற்கரையில் அரிப்பு ஏற்பட்டு வருவதாகவும், படகுகளை நிறுத்த முடியாமல் சேதமடைவதாகவும் மீனவர்கள் கலெக்டர், முதல்வர், மீன்வளத்துறை அமைச்சர், சண்முகநாதன் எம்எல்ஏ ஆகியோரிடம் முறையிட்டு வந்தனர்.
இதையடுத்து குறைவாக பகுதியில் தூண்டில் வளைவை நீட்டிக்க அரசு ஒப்புதல் அளித்தது. கிழக்கு பகுதியில் 360 மீட்டரும், மேற்கு பகுதியில் 230 மீட்டரும் தூண்டில் வளைவு நீட்டித்து அமைக்க அளவீடு செய்யப்பட்டு ரூ.30 கோடி மதிப்பீடு செய்யப்பட்டது. டெண்டர் முடிவடைந்ததும் துரிதமாக பணிகள் தொடங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் டெண்டர் விடும் பணி மே 22ம்தேதி நடத்தப்படும் என அரசு தரப்பில் தெரிவித்ததாக மீனவ பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதுகுறித்து பெரியதாழை மீனவர்கள் கூறுகையில், பெரியதாழையில் கடல் சீற்றத்தால் தொடர்ந்து கடலரிப்பால் பாதிக்கப்பட்டு வருகிறோம். தூண்டில் வளைவு அளவீடு பணிகள் முடிந்து நிதி நிர்ணயிக்கப்பட்டு டெண்டர் விடப்படாததால் பணி தொடங்கப்படாமல் உள்ளது. கடலரிப்பால் கடற்கரையில் படகுகளை நிறுத்த முடியவில்லை. இதனால் மீன் பிடித்தொழிலில் ஈடுப்படும் போது உயிருக்கு ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.
தற்போது கொரோனா தடுப்பு பணியால் 50 சதவீத மீனவர்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுப்படலாம் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் படகு நிறுத்த இடம் இல்லாமல் தொழிலுக்கு செல்ல முடியவில்லை. இதனால் வறுமையில் வாடுகிறோம். எனவே அரசு நிவாரண தொகை வழங்கிட வேண்டும். மேலும் போர்கால அடிப்படையில் தூண்டில் வளைவு அமைக்க டெண்டர் விட்டு உடனடியாக தூண்டில் வளைவை நீட்டித்து அமைத்து எங்களது வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்றனர்.