சென்னை: தமிழகத்தில் 2.23 லட்சம் பிசிஆர் சோதனை கருவிகள் கையிருப்பு உள்ளதாகவும், ரேபிட் டெஸ்ட் கருவிகளுக்கான பணம் திரும்ப பெறப்பட்டு விட்டதாகவும் சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார். தமிழகத்தில் சோதனை கருவிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் இதனால் சோதனைகள் நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் பரவியது. மேலும் ஒரு சில மருத்துவமனைகளில் அறிகுறிகள் இல்லாதவர்களுக்கு சோதனை நடத்தப்படுவது இல்லை என்றும் தகவல் வெளியானது.
இதற்கிடையில், சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தமிழகத்தில் தற்போது 2.23 லட்சம் பிசிஆர் சோதனை கருவிகள் உள்ளன. கூடுதலாக 11 லட்சம் சோதனை கருவிகள் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளது. சீனாவில் இருந்து வாங்கிய 24 ஆயிரம் ரேபிட் பரிசோதனை கருவிகளில் 5 ஆயிரம் பயன் படுத்தப்பட்டுவிட்டது மீதமிருந்த 19,000 கருவிகள் திருப்பி அனுப்பப்பட்டன. அதற்குரிய பணமும் திரும்பப் பெறப்பட்டு விட்டது’ என்று கூறினார்.