×

பகட்டு அறிவிப்புகளை வெளியிட்டு பாலிடிக்ஸ் செய்யாமல் விவசாயிகளின் அனைத்து வங்கி கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்

* திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

* லேவா தேவி நடத்துவதும், பணம் கொடுக்க முடியாது, இந்தா கடன் வாங்கிக் கொள் என்று சொல்வதும், குறைந்தது ஐம்பது சதவிகித இந்தியர்
களுக்கு எந்த வகையிலும் உதவாது. உப்பரிகை யிலேயே வீற்றிருந்து உலகத்தைப் பார்க்காமல், சற்று கீழே இறங்கிவந்து நாட்டின் நிதர்சனமான நிலை கண்டு, கருணை மழை பொழிந்திட வேண்டும்.

சென்னை: பேரிடர் நேரத்திலும் ‘பகட்டு அறிவிப்புகளை’ வெளியிட்டு ‘பாலிடிக்ஸ்’ செய்யாமல், விவசாயிகளின் அனைத்து வங்கிக் கடன்கள் தள்ளுபடி - புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கு தலா 5000 நடைபாதை வியாபாரிகளுக்கு 10,000 ரூபாய் நேரடி பண உதவி வழங்கிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவிட்-19 ஊரடங்கின் பாதிப்பு இன்னும் எத்தனை மாதங்களுக்கு என்ற தூரமும், திசையும், எல்லையும் அறியாத துயரத்திலும், திகைப்பிலும் இருக்கும் நமது விவசாயிகளுக்கும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், தெருவோர வியாபாரிகளுக்கும், உடனடியாகப் பயனளிக்கும் ஆக்கப்பூர்வமான நிவாரணங்களைக் கொடுக்காமல் - அலங்காரப் பேச்சுகள் மூலம் ஏமாற்றி விடலாம் என்று இன்னமும் கூட மத்திய பாஜக.

அரசு நினைத்துக் கொண்டிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. 20 லட்சம் கோடி நிவாரணம் என்ற பாஜகவின் அரசியலுக்கான தலைப்புச் செய்தி - ஏழை எளிய மக்களுக்கு ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதைப் பிரதிபலிக்கும் வகையிலேயே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இரண்டாவது நாள் அறிவிப்பும் இருக்கிறது. இந்திய நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டு வரும், 5000 ரூபாய் நிதியுதவியையோ, அல்லது அகில இந்திய காங்கிரஸ் வலியுறுத்தியுள்ள 7500 ரூபாய் நிதியுதவியையோ, பணமாக, நேரடியாக, உடனடியாக  வழங்க மனமின்றி - குறிப்பாக விவசாயிகளுக்கு  மேலும் “கிரெடிட் கார்டு” கடன் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.

அதேபோல் நடைபாதை வியாபாரிகளுக்குப் பத்தாயிரம் ரூபாய் கடனாம். அதுவும் வறுமை பற்றி எரிந்து கொண்டிருக்கும் நேரத்தில் - வாழ்வாதாரம் கண்ணுக்கு எட்டும் தொலைவில் இல்லாத நிலையில், இன்னும் ஒரு மாதம் கழித்து அந்தத் திட்டம் வருமாம். நிதி அமைச்சரின் இந்த நீண்ட நேரச் சொற்பொழிவுக்குப் பதிலாக; முத்தமிழறிஞர் கலைஞர் 7000 கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்தது போல் - தி.மு.க. பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 60 ஆயிரம் கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்தது போல் - ஒரே கையெழுத்தில், இந்திய விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்து - மீளாத் துயரில் மூழ்கிக் கிடக்கும் அவர்களைக் கைதூக்கிக் கருணை காட்டிட ஏன் நிதியமைச்சர் முன்வரவில்லை?

31.03.2020 அன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலை அறிக்கையில் மத்திய உள்துறை செயலாளரே 4.14 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்தான் நாட்டில் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கும் போது - நிதியமைச்சர் ரேசன் வழங்குவதால் எப்படி 8 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்பது புலப்படவில்லை? ஏன் இத்தகைய முரண்பாடு?  பேரிடர் நேரத்திலும் வழக்கம் போல் பகட்டு அறிவிப்புகளை வெளியிட்டு பாலிடிக்ஸ் செய்வதைத் தயவு செய்து தவிர்த்து விட்டு, கோவிட்-19 துயரில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கும் ஏழை எளிய நடுத்தரப் பிரிவு மக்களைக் காப்பாற்றும் நேரடி நிதியுதவி நடவடிக்கைகளில் மத்திய நிதியமைச்சர், மேலும் தாமதிக்காமல் ஈடுபட வேண்டும்.

 விவசாயிகளின் அனைத்து வங்கிக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கு தலா 5000 ரூபாய் வழங்கியும், எண்ணற்ற ஏழை, எளிய தாய்மார்கள் உட்பட ஒரு கோடிக்கும் மேற்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு 10,000 ரூபாய் நேரடி பண உதவி வழங்கியும் - பாதிக்கப்பட்ட அனைவரையும் வறுமை, வெறுமை ஆகிய பலிபீடத்திலிருந்து மீட்டுப் பாதுகாத்திட வேண்டும். அதைவிடுத்து லேவா தேவி நடத்துவதும், பணம் கொடுக்க முடியாது, இந்தா கடன் வாங்கிக் கொள் என்று சொல்வதும், குறைந்தது ஐம்பது சதவிகித இந்தியர்களுக்கு எந்த வகையிலும் உதவாது. உப்பரிகையிலேயே வீற்றிருந்து உலகத்தைப் பார்க்காமல், சற்று கீழே இறங்கிவந்து நாட்டின் நிதர்சனமான நிலை கண்டு, கருணை மழை பொழிந்திட வேண்டும்.



Tags : Dirty Notices, Politics, Farmers, All Bank Loans
× RELATED 10 ஆண்டுகளில் மோடியின் பிரதமர் பதவி...