சென்னை : வங்கிக்கடலில் அந்தமான் அருகே ஆம்பன் புயல் உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் அருகே தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, அதிதீவிர புயலாக உருவெடுக்க உள்ளது. இந்த புயல் வடமேற்கு திசை நோக்கி நகரும் என்றும் வரும் 18,19ம் தேதிகளில் மணிக்கு 95கி. மீ.வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தெற்கு கடலோர மாவட்டங்களிலும் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களின் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வங்கக் கடலில் நாளை (சனிக்கிழமை) ஆம்பன் புயல் உருவாக வாய்ப்புள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
இதை தொடர்ந்து, நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாற வாய்ப்புள்ளது. இது மே 17ம் தேதி வரை வடமேற்கு திசையிலும், 18ம் தேதி வடகிழக்கு திசையை நோக்கி நகர்வதால் 18, 19 ஆகிய தேதிகளில் மணிக்கு 75 -85 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சில நேரங்களில் மணிக்கு 95 கிமீ வேகம் வரை காற்று வீசும். எனவே, அந்த சமயங்களில் தெற்கு வங்கக்கடல், குமரிக்கடல், லட்சத்தீவு,மத்திய வங்கக் கடல், அரபிக்கடல் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆம்பன் புயலால் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது, எனத் தெரிவித்தார்.