ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் சிலிண்டர் வெடித்து 3 வீடு எரிந்து நாசமானது. 2 பேர் காயமடைந்தனர். ஊத்துக்கோட்டை கிருஷ்ணா குடியிருப்பில் வசித்து வருபவர்கள் விவேக் (எ) விவேகானந்தன் (42), மூர்த்தி (60), நாட்ராயன் (40). இவர்கள் மூவரும் சென்னை மற்றும் பூண்டியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணியாற்றி வருகின்றனர்.நாட்ராயன் வீட்டில் நேற்று காலை கேஸ் சிலிண்டர் காலியாகிவிட்டதால் சகாயம் என்பவர் சிலிண்டரை மாற்றியுள்ளார். அப்போது சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு, திடீரென வெடித்து சிதறியது. இதில் சகாயம், தேவி ஆகியோர் காயத்துடன் வெளியே ஓடிவந்தனர். வீடு முழுவதும் கேஸ் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
இதனால் வீட்டின் அருகே இருந்த விவேக், மூர்த்தி ஆகிய இருவரின் வீடுகளுக்கும் தீ பரவியது. இதையடுத்து 3 வீடுகளில் இருந்த 7.50 லட்சம் மதிப்புள்ள டிவி, பிரிஜ், வாஷிங்மெஷின், பீரோ கட்டில் என பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமாகின. திருவள்ளூர் தீயணைப்பு படையினர் மற்றும் ஊத்துக்கோட்டை போலீசார் விரைந்து வந்தனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். புகாரின்பேரில் ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.