×

நாடு முழுவதும் கல்வித் துறையில் அதிரடி: பள்ளி பாடத் திட்டத்தில் பிரமாண்ட சீர்திருத்தம்

* நடைமுறைப்படுத்தும் பணி துவங்கியது
* 2023ல் புதிய பாட புத்தகங்கள் தயாராகும்
* மாணவர்கள் சுமையை குறைக்கும்
* புதிய பாடத் திட்டம் மாணவர்களின் கல்விச் சுமையை குறைக்கும்.
* ஒவ்வொரு பாடத்திலும் வேலை வாய்ப்பு சார்ந்த அம்சங்கள் இடம் பெறும்.
* என்சிஇஆாடி பாடத் திட்டத்தில் கடைசியாக 14 ஆண்டுக்கு முன் மாற்றம் செய்யப்பட்டது.
* இதற்கு முன், கடந்த 1975, 1988, 2000, 2005 ஆகிய ஆண்டுகளில் பாடத் திட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டது.

புதுடெல்லி: நாட்டின் பள்ளி கல்வி திட்டத்தில் மிகப்பெரிய சீர்த்திருத்தத்தை செய்வதற்கான பிரமாண்ட நடவடிக்கையை, 14 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதற்காக, தேசிய பாடத்திட்ட கட்டமைப்பின் (என்சிஎப்) மறுஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக என்சிஇஆர்டி தனது பரிந்துரைகளை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது. நாடு முழுவதும் கல்வி கட்டமைப்பில் மாற்றம் கொண்டு வர, புதிய தேசிய கல்விக் கவுன்சிலை இறுதி செய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கான வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது இம்மாத இறுதியில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வரைவு அறிக்கையில், தேசிய பாடத்திட்ட கட்டமைப்பில் மாற்றம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.  மேலும், பள்ளி கல்வி தொடங்கி உயர் கல்வி வரையிலான அனைத்து நிலைகளிலும் சீர்திருத்தங்களை செய்யக் கோருகிறது.  தற்போதைய தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் செய்யவும், ஆசிரியர் பயிற்சியை வலுப்படுத்தவும், மாணவர்களின் வளர்ந்து வரும் தேவைகளுக்கேற்ப பள்ளி கல்வியின் அமைப்பில் மாற்றங்களை செய்யவும் வரைவு கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. இந்த பரிந்துரைகளை அடிப்படையாக கொண்டு தேசிய பாடத்திட்ட கட்டமைப்பில் புதிய மாற்றங்களை கொண்டு வர தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) முடிவு செய்துள்ளது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. புதிய பாடத்திட்டங்கள் தொடர்பாக என்சிஇஆர்டி தனது பரிந்துரைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் சமர்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதில், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் புதிய பாடத் திட்டம் தயாராகி விடும் என்றும், அதன் அடிப்படையில் புதிய பாட புத்தகங்கள் தயாரிக்கும் பணி தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய பாட புத்தகங்கள் ஏப்ரல் 2023ம் ஆண்டில் தயாராகி விடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மழலை கல்வி முதல் உயர்க் கல்வி வரை
புதிய சீர்த்திருத்தத்தின்படி, புதிய பாடத் திட்டம் மற்றும் ஆசிரியர்களின் கற்பிக்கும் முறையில் மாற்றம் கொண்டு வரப்படும். இதற்கான திட்டங்களை வகுக்கும் பணிகளை என்சிஇஆர்டி வரும் நவம்பரில் தொடங்க உள்ளது. இதற்காக நிபுணர்கள் அடங்கிய வழிகாட்டுதல் குழு அமைக்கப்படும். இதன் பின் 22 செயல் குழுக்கள் அமைக்கப்பட்டு, மழலையர் கல்வி முதல் உயர்க் கல்வி வரையிலான பாடத் திட்டங்களை மாற்றி அமைக்கும் பணிகள் தொடங்கும்.



Tags : India, Department of Education, School Curriculum and Reform
× RELATED உச்சநீதிமன்றத்தில் மீண்டும் பகிரங்க மன்னிப்பு கேட்ட ராம்தேவ்