சென்னை: சென்னை மாநகர காவல் எல்லையில், வரும் 28ம் தேதி வரை பேரணி, ஆர்ப்பாட்டங்கள், மனித சங்கிலி உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த தடை விதித்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.சென்னை மாநகர காவல் எல்லையில் 15 நாட்களுக்கு ஒருமுறை பொது இடங்களில் காவல்துறை அனுமதியின்றி போராட்டங்கள், பொதுக்கூட்டம், மனித சங்கிலி உள்ளிட்டவை நடத்த தடை விதிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் மாநகர காவல் எல்லையில் நேற்று முன்தினம் மதியம் 2 மணி முதல் வரும் 28ம் தேதி மாலை 2 மணி வரை மாநகர காவல் விதிப்படி பொது இடங்கள், சாலை, தெருக்களில் கூட்டம் கூட்டவும், பேரணி, ஆர்ப்பாட்டங்கள், மனித சங்கிலி, உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையை மீறி யாரேனும் பொதுக்கூட்டம், பேரணி உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை முறையாக செயல்படுத்த அனைத்து மாநகர இன்ஸ்பெக்டர்களுக்கும் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.