சென்னை: திருவொற்றியூரில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 500 பேருக்கு தலா 5 கிலோ அரிசி, மளிகை பொருட்கள், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இதேபோல், மணலி மண்டலம் சடையங்குப்பத்தில் 500 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. பெரம்பூர்: கொடுங்கையூர், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள், முடி திருத்துவோர், திருநங்கைகள்உள்ளிட்ட 600 பேருக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரண பொருட்களை ஆர்.டி.சேகர் எம்எல்ஏ ஏற்பாட்டில் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
தண்டையார்பேட்டை: ராயபுரம் தொகுதியில் 4 ஆயிரம் பேருக்கு தலா 5 கிலோ அரிசியை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இதேபோல், தண்டையார்பேட்டை பிள்ளையார் கோயில் தெருவில் 200 பேருக்கு மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
துரைப்பாக்கம்: சோழிங்கநல்லூர் தொகுதியில் 616 மாற்றுத்திறனாளிகளுக்கு 7.5 லட்சம் மதிப்பில் தலா 10 கிலோ அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். நிகழ்ச்சியில், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ, சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.