×

வெளிநாட்டில் இருந்து தமிழகம் வர வாய்ப்பு: காசியின் கூட்டாளியை பிடிக்க விமான நிலையங்களுக்கு நோட்டீஸ்

* போலீஸ் அதிகாரியின் தொப்பி அணிந்து இளம்பெண்ணுடன் ‘செல்பி’ வைரல்

நாகர்கோவில்: பெண் டாக்டரை ஆபாசமாக படம்பிடித்து மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காசியின் மற்றுமொரு கூட்டாளி, வெளிநாட்டில்  இருந்து தமிழகம் வருவதாக தகவல் கிடைத்துள்ளதால் அவரை பிடிக்க விமான நிலையங்களுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த இளம்பெண் டாக்டரை ஆபாச படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்த காசி  கைது செய்யப்பட்டார். அவரது செல்போன், லேப்டாப் ஆகியவற்றில் ஏராளமான பெண்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோக்கள், போட்டோக்களை  போலீசார் கண்டுபிடித்தனர்.

இந்தநிலையில், போலீஸ் அதிகாரி ஒருவரின் தொப்பியை அணிந்து இளம்பெண்ணின் மடியில் படுத்துக்கொண்டு போஸ் கொடுத்தபடி செல்பி எடுத்த  படக்காட்சிகள் வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகிறது. காசி ஏற்கனவே போலீஸ் அதிகாரி ஒருவரின் மகளிடம் நெருங்கி பழகியது தெரியவந்துள்ளது.  வெளி மாவட்டத்தை சேர்ந்த அந்த அதிகாரி நாகர்கோவிலில் தங்கியிருந்தபோது அவரது வீட்டிற்கும் காசி அடிக்கடி சென்று வந்துள்ளார்.  நாளடைவில்  பணிநிமித்தமாக பெண்ணின் தந்தை இடமாற்றம் செய்யப்பட்டார். அந்த சந்தர்ப்பத்தில் அவரது அப்பாவின் தொப்பியை எடுத்து தலையில் அணிந்து  கொண்டு இளம்பெண் மடி மீது படுத்துக்கொண்டு காசி செல்பி எடுத்துள்ளார். பின்னர் அவருடன் எடுத்து வந்த புகைப்படங்களையும் வெளியிட்டு  விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.

இவை ஒருபுறம் இருக்க நாகர்கோவிலில் உள்ள மேலும் ஒரு போலீஸ் அதிகாரியின் மகனுடன் காசி நண்பராக இருந்ததாக கூறப்படுகிறது. அவரது  வீட்டிற்கும் அடிக்கடி சென்று வந்துள்ளார். இது அந்த போலீஸ் அதிகாரிக்கும் நன்றாக தெரியும் என்று கூறப்படுகிறது. இதனால் தன்னை யாராலும்  எதுவும் செய்ய முடியாது, போலீசார், வக்கீல் என்று எல்லோரும் என்வசம் உள்ளனர் என்ற அடிப்படையில் காசி, பெண்களிடம் பேசியும், சமூக  வலைதளங்களில் பதிவிட்டும் பெண்களை மிரட்டி வந்ததும் அம்பலமாகியுள்ளது.

இந்த விவகாரத்தில், காசியின் நண்பர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதுதவிர, சார்ஜாவில் உள்ள அவரது  நண்பரையும் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். தற்போது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  அரபு நாடுகளில் இருந்து  விமானங்கள் மூலம் இந்தியர்கள் வெளியேறி வருகின்றனர். அவ்வாறு காசியின் கூட்டாளியும் வரலாம் என்று எதிபார்க்கப்படுகிறது. இதனால் அவரது  புகைப்படம், முகவரி உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய நோட்டீஸ் ஒன்றை விமான நிலையங்களுக்கு குமரி தனிப்படை போலீசார் வழங்கியுள்ளனர்.

வக்கீல்கள் ஆஜராக மாட்டார்கள்
நாகர்கோவில் வக்கீல் சங்க தலைவர் ராஜேஷ் கூறுகையில், ‘நாகர்கோவில் வக்கீல்கள் சங்கம் தீர்மானத்தின்படி குமரி மாவட்ட வக்கீல்கள் யாரும்  காசி வழக்குகளில் ஆஜராகமாட்டார்கள்’ என்றார்.


Tags : Tamil Nadu ,overseas ,airports ,partner ,Kasi ,Kazi , Overseas, Tamil Nadu, Khasi, Airports, Notices
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...