உளுந்தூர்பேட்டை, மே 15: விழுப்புரம் அருகே சிறுமதுரை கிராமத்தில் அதிமுக பிரமுகர்களால் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட சிறுமி ஜெயயின் வீட்டுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் முருகன், முன்னாள் எம்எல்ஏ கலிவரதன் உள்ளிட்ட 10 பேர் நேரில் சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். இதேபோல தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், முன்னாள் எம்எல்ஏக்கள் பார்த்தசாரதி, வெங்கடேசன் உள்ளிட்ட 6 பேர் சென்று பார்த்தனர். அப்போது அவர் ஜெயயின் பெற்ேறாரிடம் ₹1 லட்சம் வழங்கினார். மேலும் சிறுமியை எரித்தவர்களை என்கவுன்டரில் போட வேண்டும் என பேட்டியளித்தார்.
இதையடுத்த பாஜ தலைவர் முருகன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா உள்ளிட்டோர் மற்றும் மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ் உள்ளிட்ட 8 பேர் மீதும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் அறிவுக்கரசு உள்ளிட்ட 8 பேர் மீதும், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முஸ்தாக்தீன் உள்ளிட்ட 9 பேர் மீதும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாவட்ட செயலாளர் அமீர் அப்பாஸ் உள்ளிட்ட 9 பேர் மீதும் 144 தடை உத்தரவை மீறி கொரோனா வைரஸ் தொற்று பரவும் வகையில் கூட்டமாக சென்றதாக திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.