விழுப்புரம்: விழுப்புரம் மாவட்cடம் திருவெண்ணெய் நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். அதே பகுதியில் பெட்டி கடை நடத்தி வருகிறார். கடந்த 10ம் தேதி இவரது மகள் ஜெய எரித்து கொலை செய்யப்பட்டார். அவர் அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் அதேபகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்கள் முருகைய, கலியபெருமாள் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ததுடன் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு விழுப்புரம் கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதுகுறித்து விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார் கூறுகையில், ‘‘மாணவி கொலை வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை கலெக்டருக்கு அனுப்பப்பட்டுள்ளது. முறையாக விசாரணை மேற்கொண்டுதான் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கை எந்த வகையில், யார் விசாரணை மேற்கொண்டாலும் காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்கள்தான் (அதிமுக பிரமுகர்கள்) குற்றவாளிகள்’’ என்று கூறினார். காவல்துறை அறிக்கையை, மாவட்ட கலெக்டர், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு ஓரிரு நாட்களில் அனுப்பி வைப்பார் என்று கூறப்படுகிறது.