×

போலீஸ் அதிகாரியின் தொப்பியுடன் இளம்பெண் மடியில் காமக்கொடூரன் காசி: வாட்ஸ் ஆப்பில் வைரலாகும் புகைப்படம்

நாகர்கோவில்: போலீஸ் அதிகாரி ஒருவரின் தொப்பியை அணிந்தவாறு இளம் பெண் மடியில் போஸ் கொடுக்கும் காசியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் கணேசபுரம் ரோடு பகுதியை சேர்ந்த காசி சென்னையை சேர்ந்த இளம் பெண் டாக்டரை ஆபாச படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் மீது நாகர்கோவிலை சேர்ந்த ஒரு பெண் தன்னை மிரட்டியதாக புகார் அளித்தார். அதனை போன்று கந்துவட்டி கேட்டு மிரட்டி தன்னிடம் இருந்து பைக்கை பறித்தார் என்றும் புகார் அளித்தார்.

இதற்கிடையே குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட காசியை மூன்று நாள் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து காசியின் கூட்டாளி டைசன் ஜினோ என்பவரும் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் சில கூட்டாளிகளுக்கு காசியின் செயல்பாடுகளில் நெருங்கிய தொடர்பு உள்ளது என்றும், அவர்களில் இருவர் வெளிநாடுகளில் இருப்பதாகவும் போலீசார் கூறியிருந்தனர். இதற்கிடையே காசி பெண்களை மிரட்டும் ஆடியோக்கள் லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்தநிலையில் காசி போலீஸ் அதிகாரி ஒருவரின் தொப்பியை அணிந்து இளம் பெண் ஒருவரின் மடியில் படுத்துக்கொண்டு போஸ் கொடுக்கும் காட்சிகள் வாட்ஸ் ஆப்பில் வைரலாகி வருகிறது. காசி ஏற்கனவே பெண் போலீஸ் அதிகாரி ஒருவரின் மகளிடம் நெருங்கி பழகியது தெரியவந்துள்ளது. வெளி மாவட்டத்தை சேர்ந்த அந்த அதிகாரி நாகர்கோவிலில் தங்கியிருந்தபோது அவரது வீட்டிற்கும் காசி அடிக்கடி சென்று வந்துள்ளார். அவர்களது படுக்கை அறை வரை செல்லும் அளவிற்கு நெருக்கம் இருந்துள்ளது. இது அந்த போலீஸ் அதிகாரிக்கு தெரிந்தே நடந்துள்ளது. இருப்பினும் அவரால் அதனை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அப்போது கோட்டார் போலீஸ் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டராக இருந்த அதிகாரி ஒருவரிடம் இது தொடர்பான புகார் சென்ற நிலையில் அவர் இதனை கையில் எடுத்து விசாரணை நடத்தியுள்ளார். மேலும் காசியையும் காவல்நிலையத்தில் அழைத்து விசாரணை நடைபெற்று வந்துள்ளது. அந்த நிலையில் திடீரென்று அந்த சப் இன்ஸ்பெக்டர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும் இளம்பெண்ணின் தந்தையான போலீஸ் அதிகாரியும் பின்னர் வேறு மாவட்டத்திற்கு இடமாறுதல் பெற்று சென்றுவிட்டார்.

அந்த காவல் அதிகாரி வீட்டிற்கு சென்றபோது அவரது வீட்டில் அமர்ந்து கொண்டு அவரது தொப்பியை எடுத்து தலையில் அணிந்து கொண்டு இளம்பெண் மடி மீது படுத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார். பின்னர் அவருடன் எடுத்து வந்த புகைப்படங்களையும் வெளியிட்டுவிடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. தற்போது அந்த பெண்ணையும் புகார் அளிக்க போலீஸ் தரப்பில் அழைப்பு விடுப்பதாகவும், ஆனால் போலீஸ் அதிகாரி தரப்பில் மறுப்பதாகவும் கூறப்படுகிறது. இவை ஒருபுறம் இருக்க நாகர்கோவிலில் உள்ள மேலும் ஒரு போலீஸ் அதிகாரியின் மகனுடன் காசி நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.

அவரது வீட்டிற்கும் அடிக்கடி சென்று வந்துள்ளார். இது அந்த போலீஸ் அதிகாரிக்கும் நன்றாக தெரியும் என்பதால்தான் தன்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது, போலீசார், வக்கீல் என்று எல்லோரும் என்வசம் உள்ளனர் என்ற அடிப்படையில் காசி, பெண்களிடம் பேசியும், சமூக வலைதளங்களில் பதிவிட்டும் பெண்களை மிரட்டி வந்ததும் அம்பலமாகியுள்ளது.

Tags : police officer , Police officer's cap, kasi, vats
× RELATED ஜீப்- அரசு பஸ் நேருக்கு நேர் மோதல்;...