×

ராமநாதபுரம் முகாமில் தனிமையில் இருந்தவர்கள் ஜன்னலை உடைத்து தப்ப முயற்சி: அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என புகார்

சாயல்குடி: போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காததால், ராமநாதபுரம் கல்லூரியில் தனிமையில் வைக்கப்பட்டிருந்தவர்கள், ஜன்னலை உடைத்து தப்ப முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரத்தில் தேவிப்பட்டினம் சாலையிலுள்ள அண்ணா பொறியியல் கல்லூரி, திருவாடானை, பார்த்திபனூர், பரமக்குடி, முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி ஆகிய ஊர்களில் அரசு கல்லூரி, பள்ளிகளில் தனிமைப்படுத்தும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் பணியாற்றிய தொழிலாளர்கள், மீனவர்கள், பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் 19 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ‘தங்களுக்கு போதிய அளவு உணவு வழங்கவில்லை. சுகாதாரமற்ற கழிவறையால் சிரமமடைகிறோம். பூச்சிகள் தொல்லை அதிகம் உள்ளது. குடிப்பதற்கும், குளிப்பதற்கும் போதிய தண்ணீர் வசதியில்லை’ என்று இவர்கள் புகார் தெரிவித்து வந்தனர். மேலும் ரத்த பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகளும் இவர்களுக்கு செய்யப்படவில்லை. இதனால் இங்கு தங்கியிருந்தவர்களில் சிலர் ஜன்னலை உடைத்து அதன் வழியே தப்ப முயன்றனர். பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார், அவர்களை தடுத்துள்ளனர்.

அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து முகாமில் தங்க வைத்தனர். பிறகு போலீசார் கல்லூரியில் திறந்த வெளி பகுதிகளை கருவேல முட்களை கொண்டு அடைத்தனர். தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் அடிப்படை வசதிகள் இன்றி தப்பிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்று அடிப்படை வசதியில்லாத முகாம்களை கலெக்டர் ஆய்வு செய்து, குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : camp ,Ramanathapuram ,survivors , Ramanathapuram, escape, complaint
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு